மும்பை : அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தேர்ந்த அனுபவ பேட்ஸ்மேன் போல ஆடிய இந்திய அணி கேப்டன் உதய் சாகரன் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அவரது இந்த கிரிக்கெட் திறமைக்கு காரணம் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அந்த ஆயுர்வேத மருத்துவர் வேறு யாருமல்ல. அவரது தந்தை சஞ்சீவ் சாகரன் தான். அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளரும் ஆவார். தன்னால் பெரிய கிரிக்கெட் வீரராக வர முடியவில்லை என்ற நிலையில் தன் மகனுக்கு கிரிக்கெட்டை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறார். ராஜஸ்தானை சேர்ந்தவர்.

இளம் வயதிலேயே உதய் சாகரனும் தந்தையைப் போல கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டவே அவருக்காக வீட்டின் பின்புறத்தில் கிரிக்கெட் வலைப் பயிற்சிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். பின்னர் 14 வயதில் ராஜஸ்தான் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட போதுமான வசதிகள் இல்லை என்பதை உணர்ந்த சஞ்சீவ், தன் மகனுக்காக பஞ்சாப் மாநிலத்துக்கு குடி பெயர்ந்தார். அங்கு தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டதோடு அண்டர் 14, அண்டர் 16 அணிகளில் சிறப்பாக ஆடி பெயர் பெற்ற உதய் சாகரன் தற்போது இந்திய அண்டர் 19 அணிக்கே கேப்டன் ஆகி இருக்கிறார்.
ஆயுர்வேத மருத்துவர் என்றாலும் கிரிக்கெட்டையும் விடாமல், பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சஞ்சீவ் சாகரன், தன் மகனுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்ததோடு, ஒவ்வொரு போட்டி சூழ்நிலையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் சில பயிற்சிகளை கொடுத்து இருக்கிறார். அதை பயன்படுத்தியே அண்டர் 19 அரை இறுதியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த திட்டம் வகுத்தார் உதய் சாகரன்.
இந்த அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 244 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அப்போது உதய் சாகரன் மற்றும் சச்சின் தாஸ் களத்தில் இருந்தனர். விக்கெட் வீழ்ச்சியால் ஏற்பட்ட அழுத்தத்தை தான் உலகக்கோப்பை வாங்கிக் கொண்டு, சச்சின் தாஸை இயல்பான ஆட்டம் ஆடுமாறு கூறினார். அதற்காக தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்யும் வகையில் ரன் குவிக்காமல் நீண்ட நேரம் நின்றார் சாகரன். பின்னர் பந்து பழையதான உடன் ரன் குவிக்கத் துவங்கினார்.
சச்சின் தாஸ் தன் இயல்பான ஆட்டத்தால் 96 ரன்கள் குவித்தார். உதய் சாகரன் 81 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றிக்கு பின் பேசுகையில் அழுத்தமான சூழ்நிலையில் எப்படி ஆட வேண்டும் என்று தன் தந்தை சொல்லிக் கொடுத்த விதத்தில் தான் ஆடியதாக குறிப்பிட்டார் உதய்.