பெனானி : அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி வீரர் ஹர்ஜாஸ் சிங் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இவர் சண்டிகரில் பிறந்த இந்தியர். பின்னர் ஆஸ்திரேலியா சென்று தற்போது ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று, இந்திய அணியையே வீழ்த்த காரணமாக இருந்து இருக்கிறார்.
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அரைசதம் அடித்து முத்திரை பதித்து இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை குறைவாக கொடுத்து அவ்வப்போது விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.

எனினும், மிடில் ஆர்டரில் இறங்கிய ஹர்ஜாஸ் சிங் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன் காரணமாக ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த ஸ்கோரை எட்ட முடியாமல் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அண்டர் 19 உலகக்கோப்பை வென்றது.
ஆஸ்திரேலியாவின் இந்த சாதனைக்கு காரணமான ஹர்ஜாஸ் சிங் சண்டிகரில் பிறந்தவர். ஐந்து வயது வரை இந்தியாவில் இருந்த அவர், பின்னர் தன் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தார். அங்கே 8 வயதில் இருந்தே கிளப் கிரிக்கெட் அணிகளில் இடம் பெற்று கிரிக்கெட் ஆடத் துவங்கினார். இவருக்கு இயல்பாகவே விளையாட்டின் மீது ஆர்வம் வர முக்கிய காரணம் அவரின் பெற்றோர் இருவருமே விளையாட்டு வீரர்கள் என்பது தான்.
ஹர்ஜாஸ் சிங்கின் தந்தை இந்திரஜித் சிங் பஞ்சாப் மாநில குத்துச்சண்டை சாம்பியன் ஆவார். அவரது தாய் ஆவிந்தர் கவுர் மாநில அளவில் உயரம் தாண்டுதல் வீராங்கனையாக இருந்தவர். அதனாலேயே கிரிக்கெட்டில் மிகச் சிறிய வயதில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார் ஹர்ஜாஸ் சிங்.
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்ற அவர் இறுதிப் போட்டிக்கு முன் 6 இன்னிங்ஸ்களில் வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால், முக்கியமான இறுதிப் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் கை விட்ட நிலையில் 55 ரன்கள் குவித்து தன் திறமையை நிரூபித்து இருக்கிறார்.