சச்சினின் ஜெர்சியை பார்த்து பயப்படும் வீரர்கள்.. ஆடைக்கு ரிட்டயர்மெண்ட் அளிக்க போகும் பிசிசிஐ!
டெல்லி: சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதில் இருந்து அவரது ஜெர்சி எண் யாராலும் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
இரண்டு மாதம் முன்பு நடந்த இலங்கை தொடரில் இந்திய அணியில் விளையாடிய ஷர்த்துல் தாகூர், சச்சின் டெண்டுல்கரின் 10ம் நம்பர் ஜெர்சியை அணிந்து இருந்தார். இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இந்த சர்ச்சையின் காரணமாக பிசிசிஐ அமைப்பு சச்சினின் ஜெர்சிக்கு ரிட்டயர்மெண்ட் அளிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்படாத ரிட்டையர்மெண்ட் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெர்சி 10
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண் 10. 2013 ஆம் வருடம் நவம்பர் 16ல் மும்பையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியே சச்சின் டெண்டுல்கர் கடைசியாக விளையாடிய ஐசிசி போட்டியாகும். அந்த போட்டியில் இருந்து அவர் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றார். அதன்பின் அவர் ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்தவில்லை.

ஷர்த்துல் தாகூர்
இரண்டு மாதத்திற்கு முன்பு இலங்கையில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் ஷர்த்துல் தாகூர் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண்ணான 10ல் ஜெர்சி அணிந்திருந்தார். அதில் அவரது முதல் பெயரான ஷர்த்துல் என்பது இடம்பெற்றிருந்தது. 10ம் நம்பர் அவரது பிறந்த நாளின் கூட்டுத்தொகை என்பதால் தான் அந்த எண் கொடுக்கப்பட்டது என பிசிசிஐ விளக்கம் கொடுத்தது.

வீரர்கள் பயம்
ஷர்த்துல் தாகூர் சச்சினின் ஜெர்சியை அணிந்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைத்தளங்களில் பலர் பிசிசிஐக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். இதை பார்த்து பயந்த ஷர்த்துல் தனது ஜெர்சி நம்பரை 54 ஆக மாற்றினார். மேலும் புதிய இந்திய வீரர்களும் சச்சினின் ஜெர்சி நம்பரை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தனர்.

ஆடைக்கு ரிட்டயர்மெண்ட்
இந்த நிலையில் சச்சினின் ஜெர்சிக்கு ரிட்டயர்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக சச்சினின் ஜெர்சிக்கு ரிட்டயர்மெண்ட் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications