கான்பூர்: பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் புவனேஷ்வர் குமார் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை முதல் சில ஓவர்களிலேயே வீழ்த்தி அசத்தியவர் புவனேஷ்வர் குமார்.

தென்னாப்பிரிக்கா அணி வெறும் 12 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகன் விருதை வென்ற போது, 2வது டெஸ்ட் போட்டியிலேயே விராட் கோலியால் பெஞ்ச் செய்யப்பட்டார். அதேபோல் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதற்கும் புவனேஷ்வர் குமார் முக்கிய காரணமாக அமைந்தார்.
ஆனால் அந்த டெஸ்ட் தொடர் தான் புவனேஷ்வர் குமாருக்கு கடைசி டெஸ்ட் தொடராகும். அதன்பின் இந்திய அணிக்காக புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல் அந்த ஆண்டுடன் புவனேஷ்வர் குமார் ரஞ்சி டிராபி போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஞ்சி டிராபி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக களமிறங்கியுள்ளார் புவனேஷ்வர் குமார்.
இந்த நிலையில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் உத்தரப் பிரதேச அணி களமிறங்கியது. இதில் முதல் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேச அணி வெறும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் பெங்கால் அணி களமிறங்கிய நிலையில், புவனேஷ்வர் குமார் வேகத்தில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் வீழ்த்திய நிலையில், 2ஆம் நாள் ஆட்டத்தில் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பெங்கால் அணி மொத்தமாக 188 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், புவனேஷ்வர் குமார் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் உத்தரப் பிரதேச அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்து புவனேஷ்வர் குமார் அசத்தி இருக்கிறார்.