சென்னை: சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதைப் பார்ப்பதை விடவும், தோனி சந்திக்க வைப்பதற்காகவே என் தந்தையை சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து வந்ததாக என்று சென்னை அணியின் உர்வில் படேல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகள் அழைத்த போது, சிஎஸ்கே அணியை உர்வில் படேல் தேர்வு செய்திருப்பதும் தெரிய வந்தது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் செய்த தவறை, மிட் சீசனிலேயே களைய தொடங்கியது. தோனி கேப்டனாகிய போதும், சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் அடுத்தடுத்து இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே, அடுத்த சீசனுக்கு சிறப்பாக தயாராகிவிட்டது.

அதில் டிவால்ட் பிரெவிஸ்-க்கு பின், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உர்வில் படேல் அமைந்துள்ளார். முதல் பந்திலேயே சிக்சருடன் தொடங்கிய அவர், மிகச்சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக வருவார் என்று பார்க்கப்படுகிறது. வன்ஷ் பேடி-க்கு காயம் ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் சிஎஸ்கே அணியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சிஎஸ்கே அணிக்காக 3 போட்டிகளில் ஆடிய உர்வில் படேல் 68 ரன்களை குவித்தார். இவர் ஆடிய 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி 2 போட்டியில் வென்றது. சிஎஸ்கே அணிக்காக ஆடிய அனுபவம் குறித்து உர்வில் படேல் பேசுகையில், ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவதை நேரில் வந்து பார்க்க என் பெற்றோர் தயக்கம் காட்டினார்கள். ஆனால் என் தந்தையிடம் ஒன்றை மட்டுமே கூறினேன்.
அது என்னவென்றால், நீங்கள் நான் விளையாடுவதைப் பாருங்கள், அல்லது பார்க்காலம் இருங்கள். ஆனால் ஒருமுறை சிஎஸ்கே கேப்டன் தோனியை சந்தித்துவிடுங்கள். அதனால் தோனிக்காக மட்டுமே சிஎஸ்கே போட்டியைப் பார்க்க என் தந்தை நேரில் வந்தார். சிஎஸ்கே போட்டியின் போது அங்கு வீரர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். அந்த சூழலை என் தந்தை நன்றாக அனுபவித்தார்கள்.
அங்கு காசி விஸ்வநாதன் சாரும் இருந்தார். அவர்தான் எனது தந்தையை அழைத்து சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் தோனியை ஹோட்டலில் சென்று சந்தித்தோம். அது எங்கள் அனைவருக்கும் ஸ்பெஷலான ஒரு தருணம். சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று தெரிந்த பின், அங்கிருந்த மைதானத்தில் சூழலை நினைத்து அஞ்சினேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் அறிமுகமான போது, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதை போல் விளையாடத் தொடங்கிவிட்டேன். இந்த முறை இழப்பதற்கும் என்னிடம் எதுவும் கிடையாது. அதனால் க்ளீன் சிலேட்டாக சென்று விளையாடினேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகள் அழைத்த போது, உர்வில் படேல் சிஎஸ்கே அணியைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.