நியூயார்க்: இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரியின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டக்கனவு, அரையிறுதிப் போட்டியில் சோகத்துடன் முடிவுக்கு வந்தது. நியூயார்க்கில் நடைபெற்ற 2025 யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், யூகி பாம்ப்ரி மற்றும் அவரது நியூசிலாந்து ஜோடியான மைக்கேல் வீனஸ், பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி மற்றும் நீல் ஸ்கப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டனர்.
இந்தப் போட்டியில் இருவரும் கடுமையாகப் போராடித் தோல்வியடைந்தனர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த த்ரில்லர் போட்டியில், யூகி - வீனஸ் ஜோடி 7-6, 6-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

வெற்றி நிச்சயம் என்று நினைத்த தருணத்தில்தான் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது. முதல் செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றி, இரண்டாவது செட்டிலும் பிரேக் முன்னிலையுடன் யூகி பாம்ப்ரி ஜோடி ஆதிக்கத்துடன் விளையாடியது. இரண்டாவது செட்டின் ஐந்தாவது கேமில் கிடைத்த இரண்டு பிரேக் பாயிண்ட்களை அவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வாய்ப்பை நழுவவிட்டது, யூகி பாம்ப்ரியின் ஆட்டத்தில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது.
அந்தத் தருணத்திற்குப் பிறகு யூகி பாம்ப்ரி தனது இயல்பான ஆட்டத்தை இழந்தார். தேவையில்லாத தவறுகள் அதிகரிக்கத் தொடங்கின. அனுபவ வீரர்களான பிரிட்டிஷ் ஜோடி, இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, இரண்டாவது செட்டை டை பிரேக்கரில் வென்று, போட்டியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிற்கு எடுத்துச் சென்றனர். மூன்றாவது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சாலிஸ்பரி-ஸ்கப்ஸ்கி ஜோடி, இறுதியில் போட்டியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தத் தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், யூகி பாம்ப்ரி இந்தப் பயணத்தைக் கண்டு நிச்சயம் பெருமை கொள்ளலாம். தனது டென்னிஸ் பயணத்திலேயே முதல் முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறி யூகி பாம்ப்ரி சாதித்துள்ளார். இந்தத் தொடரில் அவர் காட்டிய அபாரமான ஆட்டம், ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான தரவரிசையில் அவரை முதல் 25 இடங்களுக்குள் கொண்டு செல்லும்.
இந்தியாவின் மூத்த வீரர் ரோகன் போபண்ணா ஏற்றிச் சென்ற இந்திய இரட்டையர் பிரிவுக்கான கொடியை, இனி 33 வயதான யூகி பாம்ப்ரி கம்பீரமாக ஏந்திச் செல்வார் என்ற பெரும் நம்பிக்கையை இந்த யுஎஸ் ஓபன் தொடர் கொடுத்துள்ளது.