நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வரலாற்றில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்து அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் 25வது லீக் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக நிதீஷ் குமார் 27 ரன்களும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்காளும் சேர்த்தனர். நியூயார்க் மைதானத்தின் பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், சவாலான இலக்காக பார்க்கப்படுகிறது.
இதில் இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 4 ஓவர்களில் மொத்தமாக 17 டாட் பால்களை வீசியது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ராவை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார். 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 32 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அதேபோல் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக சிறந்த பவுலிங்கை அர்ஷ்தீப் சிங் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக 2014 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அஸ்வின் 11 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதனை அர்ஷ்தீப் சிங் முறியடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த அர்ஷ்தீப் சிங், டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுகளை பெற்று வருகிறது.