ஃபுளோரிடா : 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின், பாகிஸ்தான் அணி மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 30வது லீக் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்த்து ஐயர்லாந்து அணி விளையாடுவதாக இருந்தது. ஆனால் ஃபுளோரிடா மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்தது. இதனால் ஃபுளோரிடாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் மதியத்திற்கு பின் ஓரளவுக்கு மழை குறைந்து, வெயில் அடிக்க தொடங்கியது.

ஆனால் மைதானத்தை முழுமையாக தார்பாய் வைத்து மூடப்படவில்லை. இதனால் மைதானத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் திட்டமிட்டபடி 8 மணிக்கு டாஸ் போடவில்லை. அதன்பின் 9 மணிக்கும், பின்னர் 10 மணிக்கும், அதன்பின் 10.45 மணிக்கு நடுவர்கள் மீண்டும் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.
இறுதியாக 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா அணி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இதன் மூலமாக அசோசியேட் அணிகள் 7வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஏற்கனவே இலங்கை, நியூசிலாந்து அணிகள் வெளியேறியுள்ள நிலையில், அந்த வரிசையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது.
2007ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணியிடம் தோல்வியடைந்து குரூப் சுற்றுடன் வெளியேறியது. தற்போது மீண்டும் அமெரிக்கா அணியிடம் தோல்வியடைந்து டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.