ஃபுளோரிடா : ஃபுளோரிடா மாகாணத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், போட்டிகளை வேறு மைதானத்திற்கு மாற்றாமல் ஐசிசி அடம்பிடிப்பதற்கான காரணம் குறித்து அஸ்வின் விளக்கியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்து வருகிறது. ஏற்கனவே நியூயார்க் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தற்போது ஃபுளோரிடாவில் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்கு ஃபுளோரிடாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டால், பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு செல்லும். அதுமட்டுமல்லாமல் நாளை நடக்கவுள்ள இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் பாதிக்க வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இதனால் ஃபுளோரிடாவில் நடக்கும் போட்டிகளை மாற்ற வேண்டும் என்று ரசிகர்களிடையே குரல்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அனுபவ வீரர் அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனலில் பேசுகையில், நான் எந்தக் கவலையும் இல்லாத கீ-போர்ட் வாரியராக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் ஒரு போட்டியை ஒரு மைதானத்தில் இருந்து மற்றொரு மைதானத்திற்கு மாற்றலாமே என்று சாதாரணமாக சொல்லிவிடலாம்.
நான் பாகிஸ்தான் அணியின் ரசிகராக இருக்கும் போது, நிச்சயம் சொல்லுவேன். ஏனென்றால் எனது அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் இந்த விவகாரத்தில் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். அது என்னவென்றால், முதல் மற்றொரு மைதானம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏனென்றால் விக்கெட் தயாரிப்பும், மைதான தயாரிப்பும் வெவ்வேறு விஷயங்கள். இது பெரிய விஷயமா என்று கேட்கலாம்.
ஆனால் இன்றைய சூழலை, பொருளாதாரத்தையும் பார்த்தே முடிவு எடுக்கப்பட வேண்டும். ஒரு மைதானத்தை முடிவு செய்யும் போதே, உலகக்கோப்பை தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் அளிக்கப்பட்டிருக்கும். மைதானம் தொடர்பான உரிமைகள் ஸ்பான்சர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும். அந்த பணத்தின் மூலமாக தான் பரிசுத்தொகை அளிக்கப்படும்.
அதேபோல் அமெரிக்காவில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு ஒரு போட்டியை மாற்றுவது எளிதான விஷயமல்ல. முதல் ஹோட்டல்களை புக் செய்ய வேண்டும். ஒரு அணிக்கு சுமாராக 30 முதல் 35 அறைகள் வரை தேவைப்படும். அதேபோல் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்திருக்க வேண்டும். டிக்கெட் விற்பனை ஒரு இடத்திலும், டிக்கெட்டுக்கான ரீ-பன்ட் இன்னொரு பக்கமும் இருக்கும். நாம் நினைப்பதை போல் அவ்வளவு எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.