நியூயார்க் : கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னரும் கூட தனது லேப்-டாப்பில் அமர்ந்து அமெரிக்கா வீரர் சவுரப் நெட்ரவால்கர் பணியாற்றி வருவதாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த அணி என்றால் அது அமெரிக்கா தான். ஏனென்றால் அமெரிக்கா அணியில் விளையாடும் வீரர்களில் பாதி வீரர்கள் இந்தியர்கள் தான். அதில் 2010 யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சவுரப் நெட்ரவால்கர், அமெரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரை சிறப்பாக வீசி வெற்றியை பெற்று கொடுத்த நெட்ரவால்கர், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி ஆச்சரியமளித்தார். அமெரிக்காவில் ஒரக்குள் இஞ்சினியராக பணியாற்றி வரும் நெட்ரவால்கர், வார இறுதியில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கிரிக்கெட்டுக்காக இஞ்சினியர் பணியையும், பணிக்காக கிரிக்கெட்டையும் கைவிடாதவர் சவுரப் நெட்ரவால்கர் என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டி முடிவடைந்த பின்னரும், நெட்ரவால்கர் தனது லேப்-டாப்பை திறந்து பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சவுரப் நெட்ரவால்கர் சகோதரர் நித்தி பேசுகையில், கிரிக்கெட் விளையாடும் போது தனது 100 சதவிகித உழைப்பை கொடுப்பவர் நெட்ரவால்கர். அதேபோல் பணியிலும் 100 சதவிகித உழைப்பை கொடுப்பார். இப்போது கூட லேப்-டாப்பை உடன் வைத்தே பயணித்து வருகிறார். அவர் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் போதும் கூட ஒரு லேப்-டாப்பை எப்போதும் கையில் கொண்டு வருவார்.
தற்போது ஒவ்வொரு போட்டி முடிவடைந்த போதும் அலுவலக பணியை முடித்துவிடுகிறார். அனைத்து வேலைகளையும் அர்ப்பணிப்புடன் செய்வதே அவரின் இயல்பு. இது மும்பையில் பிறந்தவர்களுக்கே உரித்தான ஒன்று என நினைக்கிறேன். ஏனென்றால் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடிய போது, பயிற்சிக்காக சர்ச்கேட் பகுதி வரை செல்ல வேண்டும். அப்போது ரயிலில் பயணிக்கும் போதே வீட்டுப்பாடத்தை முடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. கிரிக்கெட்டில் எவ்வளவு தூரம் சிறப்பாக இருந்தாரோ, அதேபோல் கல்வியிலும் கவனத்தை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.