டல்லாஸ் : 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்த அமெரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் சவுரப் நெட்ரவால்கர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்ற தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வருகிறார். பகுதி நேரமாகவே அமெரிக்க கிரிக்கெட் அணியில் அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணியில் இடம் பெற்ற சவுரப், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச் சிறப்பான பந்து வீசினார். முக்கியமாக சூப்பர் ஓவர் ஹீரோவாக மாறினார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது இரண்டாவது ஓவரை வீசிய சவுரப் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை வீழ்த்தினார். அங்கிருந்துதான் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. பவர் பிளே ஓவர்களுக்குள் பாகிஸ்தான அணி 3 விக்கெட்களை இழந்தது. சவுரப் முதல் விக்கெட் வீழ்த்தியதோடு மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசினார்.
மேலும், பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் இஃப்திகார் அகமது விக்கெட்டை 19வது ஓவரில் வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியை அதிக ரன்கள் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி அசத்தலாக செயல்பட்டார். 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியிலேயே மிக குறைவாக ரன்கள் விட்டுக் கொடுத்தது இவர்தான்.
பின்னர் அமெரிக்கா அணி போட்டியை டை செய்த பின் சூப்பர் ஓவர் நடந்தது. அப்போது முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி முகமது அமீர் பந்து வீச்சில் சாமர்த்தியமாக செயல்பட்டு 18 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. சவுரப் சூப்பர் ஓவரை வீசினார். பாகிஸ்தான் அணியின் அனுபவ பேட்ஸ்மேன்களான இஃப்திகார் அகமது மற்றும் ஷதாப் கான் ஆகியோரால் சவுரப் பந்து வீச்சில் ரன் குவிக்க முடியவில்லை.
மேலும் சவுரப் மீண்டும் இஃப்திகார் விக்கெட்டை சூப்பர் ஓவரில் வீழ்த்தினார். இதை அடுத்து பாகிஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. சூப்பர் ஓவரில் அமெரிக்க அணியை வெற்றி பெறச் செய்த சவுரப் குறித்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி விட்டார் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.