லாகூர் : பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில், அந்த அணி மீது பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பாகிஸ்தான் மக்கள், இந்த தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி எந்தவித போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் 228 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியதை அந்நாட்டு மக்களால் ஏற்க முடியவில்லை. அதன் பின் இலங்கை அணிக்கு எதிராக தோற்று தொடரில் இருந்தே வெளியேறியது.
அப்போது முதல் பாகிஸ்தான் வீரர்கள் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து கடும் எதிர்வினையை சந்தித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இதை தாங்க முடியாத உசாமா மிர் என்ற பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இவரும் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்த வீரர்தான்.
அவர் தனது பதிவில், "நாங்கள் நன்றாக விளையாடினால் எங்களை பாராட்டுகிறீர்கள். நாங்கள் சில போட்டிகளில் மோசமாக ஆடினால் உலகத்திலேயே நாங்கள் தான் மோசமான கிரிக்கெட் வீரர்கள் என கூறுகிறீர்கள். இது மிகவும் வலியை ஏற்படுத்துகிறது. நாங்கள் மோசமான நிலையில் இருக்கும் போது தான் உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை." என்று கூறி உள்ளார்.
மேலும், "1 - 2 போட்டிகளை வைத்து ஒரு கிரிக்கெட் வீரரை பற்றி கூறி விட முடியாது. ஷதாப் கான் சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் அவர் மோசமான கிரிக்கெட் வீரர் என கூறி விட முடியாது. தற்போது அனைவரும் அவர் அணியில் நட்பின் அடிப்படையில் தான் இடம் பிடித்து இருக்கிறார் என கூறுவது முட்டாள்தனமானது. அடுத்த போட்டியில் ஷதாப் கான் நன்றாக ஆடிவிட்டால் அவர் சிறந்த வீரர் ஆகி விடுவார். இந்த அளவுக்கு எதிர்வினைகளை காட்டும் ரசிகர்களாக நாம் இருக்கக் கூடாது" என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், "நான் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆன போது பலரும் எனக்கு பில்டப் கொடுத்தார்கள். பல்வேறு டி20 தொடர்களில் சிறப்பாக ஆடினேன். நியூசிலாந்து தொடரில் கூட சிறப்பாக செயல்பட்டேன். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதால் நான் மோசமான பந்துவீச்சாளர் ஆகி அணியில் இடம் பிடிக்கக் கூட தகுதி இல்லாதவனா? இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது." என தன் வாதத்தை முன் வைத்தார் உசாமா மிர்.
இப்படி பாகிஸ்தான் வீரர்கள் கெஞ்சி கேட்கும் அளவுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் அவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர். அடுத்து பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும். அதற்கு முன் மனதளவில் இந்த தோல்விகளில் இருந்து அந்த அணி மீள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.