ஐதராபாத்: பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாமல் சிறு வயதில் மார்க்கெட்டில் வேலை செய்ததாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப். ஷாகின் அப்ரிடியின் பலம் ஸ்விங் என்றால், ஹாரிஸ் ராஃபின் பலம் வேகம் தான். 150 கிமீ வேகத்தில் எளிதாக பேட்ஸ்மேனை அட்டாக் செய்யக் கூடிய பவுலர். இவரது பந்துவீச்சில் தான் விராட் கோலி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் அவரது பந்துவீச்சில் அப்படியொரு சிக்சரை விளாசியிருக்க முடியாது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் இந்தியா வந்திருக்கிறார். இந்திய ரசிகர்களின் விருந்தோம்பலை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் சொந்த மண்ணில் இருப்பது போல் உணர்வளிப்பதாக பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹாரிஸ் ராஃப் தனது சிறுவயது வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில், சிறுவயதில் நாங்கள் பெரிய வீட்டில் குடியிருந்தோம். ஆனால் என் தந்தைக்கு மூன்று சகோதரர்கள். அப்போது ஒவ்வொரு சகோதரருக்கும் திருமணம் முடிவடைந்த போது, என் தந்தை அனைத்து அறைகளையும் சகோதரர்களுக்காக விட்டுக் கொடுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் நாங்கள் சமையலறையில் தான் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல் பெரிய குடும்பம் என்பதால் எனது பள்ளி கட்டணத்தை கூட என் தந்தையால் கட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்தில் வறுமை வாட்டி எடுத்தது. இதனால் வார நாட்களில் பள்ளிக்கு சென்றுவிட்டு, வார இறுதி நாட்களில் மார்க்கெட்டில் திண்பண்டங்களை விற்று என் பள்ளி கட்டணத்தை கட்டினேன். நான் கல்லூரியில் சேரும் வரை இது தொடர்ந்தது.
ஆனால் கல்லூரி கட்டணத்தையும் என் தந்தையும் கட்ட முடியவில்லை. ஆனால் அப்போது டேப் - பால் கிரிக்கெட் விளையாட தொடங்கி விட்டேன். பாகிஸ்தானில் டேப் பால் கிரிக்கெட் விளையாடியதன் மூலமாக மாதத்திற்கு 2 முதல் 2.5 லட்சம் வரை சம்பாதித்தேன். அந்த பணத்தை என் தாயிடம் கொடுத்துவிடுவேன். ஆனால் நான் பணம் சம்பாதிப்பதை பற்றி ஒருநாளும் என் தந்தையிடம் கூறியதே இல்லை. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பத்தின் நிலை மாறியதாக தெரிவித்துள்ளார்.