சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள அதே வேளையில், முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் மீது கடுமையான இனவெறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 4-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ள 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்துப் பேசுகையில், தனது இஸ்லாமிய மற்றும் பாகிஸ்தானியப் பின்னணி காரணமாகத் தான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட்டதாகக் கவாஜா வேதனை தெரிவித்துள்ளார்.
"எனக்கு ஏற்பட்ட முதுகுப் பிடிப்பு என் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. ஆனால், முன்னாள் வீரர்களும் ஊடகங்களும் தொடர்ந்து 5 நாட்களாக என்னைத் தாக்கினார்கள். நிறமுள்ள வீரர்கள் (வெள்ளையர்கள் அல்லாதவர்கள்) குறிப்பாகப் பாகிஸ்தானிய அல்லது வெஸ்ட் இண்டீஸ் பின்னணி கொண்டவர்கள் என்றாலே அவர்கள் 'சோம்பேறிகள்', 'சுயநலவாதிகள்', 'பயிற்சி செய்யாதவர்கள்' என்ற முத்திரை குத்தப்படுகிறது. இதை நான் என் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டு வருகிறேன்" என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.
பெர்த் டெஸ்ட் போட்டியின் போது கவாஜா பயிற்சியைத் தவிர்த்துவிட்டு கோல்ப் விளையாடியதால் தான் அவருக்கு முதுகுப் பிடிப்பு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான் கவாஜா அந்த 'பீர்' உதாரணத்தைக் கையில் எடுத்துள்ளார்.
"போட்டிக்கு முந்தைய நாள் இரவு 15 கிளாஸ் பீர் குடித்துவிட்டு, மறுநாள் காயமடைந்த பல ஆஸ்திரேலிய வீரர்களை எனக்குத் தெரியும். அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. அவர்களை 'ஜாலியான ஆஸ்திரேலியர்கள்' என்று செல்லமாகக் கடந்து செல்கிறார்கள். ஆனால், நான் கோல்ப் விளையாடினால் மட்டும் என்னுடைய நம்பகத்தன்மையையும், என் தனிப்பட்ட குணத்தையும் கேள்வி கேட்கிறார்கள். இது அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு" என்று கவாஜா கடுமையாகச் சாடியுள்ளார்.
87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்களுடன் 6,206 ரன்களைக் குவித்துள்ள கவாஜா, "இந்தத் தொடர் தொடங்கும்போதே இதுதான் எனக்குக் கடைசி என்று தோன்றியது. என் மீதான விமர்சனங்களைத் தாண்டி, நான் விரும்பியபடி, எனது சொந்த முடிவின் பேரில் ஓய்வு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார். கவாஜாவின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மறைமுகமாக இருக்கும் இனப் பாகுபாட்டை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.