உத்தரகண்ட் பனிச்சரிவு.. தன் ஊதியத்தை வழங்கும் ரிஷப் பண்ட் - 'ரியல் ஹீரோ' என ரசிகர்கள் வாழ்த்து
சென்னை: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிமலைச் சரிவினால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 14 பேர் பலியான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மீட்புப் பணிக்காக தனது சம்பளத்தை நிதியுதவியாக அளிக்கிறார்.
ஞாயிறன்று, உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிக்குன்று ஒன்று சரிவு கண்டதில் அலக்நந்தா நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். 170 பேரை காணவில்லை.
வெள்ள நீர் சூழ்ந்ததையடுத்து கிராமத்தினரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய, மாநில பேரிடர் குழு, ராணுவம், இந்திய கடற்படை நீச்சல் வீரர்கள் என பல குழுக்கள் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது போட்டிக்கான ஊதியத்தை அளிக்க முன்வந்துள்ளர்.

எல்லோரும் கைக்கொடுங்க
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். மீட்புப் பணிகளுக்காக என் போட்டி ஊதியத்தை கொடுக்க விரும்புகிறேன். அனைவரும் நிதியளிக்க முன் வர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிரடி ரிஷப்
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை, ரிஷப் பண்ட் தனது அதிரடியான 91 ரன்கள் மூலம் புஜாராவுடன் இணைந்து மீட்டார்.

கௌரவமான ஸ்கோர்
சதம் பற்றியெல்லாம் கவலைப்படாமல், 91 ரன்களில் தூக்கி சிக்ஸர் அடிக்க நினைத்து, கேட்ச்சாகி வெளியேறினார். புஜாரா 73 ரன்களும், சுந்தர் 85 ரன்களும் எடுக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 337 என்ற ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோரை எட்டியது.

ரசிகர்கள் பாராட்டு
இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது மட்டுமின்றி, உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களையும் நினைத்து பார்க்கும் ரிஷப்பின் இந்த அறிவிப்புக்கு சமூக தளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications