டெல்லி: உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோதிர்பெக் யாகூபோவ், டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலியுடன் கை குலுக்க மறுத்தது சர்ச்சையாக மாறி இருந்தது. அதற்காக விளக்கம் அளித்து இருந்த அவர், தற்போது வைஷாலியை சந்தித்து நேரில் மன்னிப்பு கோரினார்.
நோதிர்பெக் யாகூபோவ் பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளுடன் வைஷாலியை சந்தித்து அவரது தாய் மற்றும் சகோதரர் பிரக்ஞானந்தா முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ தற்போது செஸ் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் நோதிர்பெக் யாகூபோவ், "இது இருவருக்கும் ஒரு மோசமான சூழ்நிலை. நான் அன்று அவசரத்தில் இருந்தேன். இது ஒரு தவறான புரிதல், என்னை மன்னிக்கவும். உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க விரும்புகிறேன். உங்களையும் உங்கள் சகோதரரையும் மற்றும் அனைத்து இந்திய செஸ் வீரர்களையும் நான் மதிக்கிறேன். புரிந்து கொண்டதற்கு நன்றி, விடைபெறுகிறேன், அனைவருக்கும் சிறந்தது நடக்கட்டும்," என்று கூறியது பதிவாகி உள்ளது.
வைஷாலியும் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். "இது புரிந்து கொள்ளக்க்கூடியதுதான். நீங்கள் செய்ததற்கான காரணங்களைப் பற்றி நான் அப்போது நினைக்கவில்லை," என்று அந்த வீடியோவில் வைஷாலி கூறி இருக்கிறார்.
யாகூபோவ் மற்றும் வைஷாலி இடையிலான 4-வது சுற்று ஆட்டத்தின்போது அந்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தது. பரவலாகப் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வைஷாலி வழக்கமான போட்டிக்கு முந்தைய கை குலுக்கலுக்கு தனது கையை நீட்டினார். இருப்பினும், யாகூபோவ் அந்த சைகையை நிராகரித்து, செஸ் பலகையில் தனது காய்களை சரிசெய்யத் தொடங்கினார். அதனால் வைஷாலி சற்று அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் யாகூபோவ் தான் அப்போது அவசரத்தில் இருந்ததாகவும், அனைத்து இந்திய செஸ் வீரர்களையும் மதிப்பதாகவும் கூறி விளக்கம் அளித்தார். முன்னதாக, சமூக ஊடகங்களில் அவர் கடுமையான விமர்சனங்களைப் சந்தித்த பின், யாகூபோவ் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கு மூலம் மன்னிப்பு தெரிவித்திருந்தார்.
"அன்பான செஸ் நண்பர்களே, வைஷாலியுடன் நடந்த சம்பவத்தைப் பற்றி விளக்க விரும்புகிறேன். பெண்கள் மற்றும் இந்திய செஸ் வீரர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டு, மத காரணங்களுக்காக நான் மற்ற பெண்களைத் தொட மாட்டேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்," என்று யாகூபோவ் எக்ஸ் தளத்தில் எழுதினார்.
"வைஷாலியையும் அவரது சகோதரரையும் இந்தியாவின் இரண்டு வலிமையான செஸ் வீரர்களாக நான் மதிக்கிறேன். எனது நடத்தை அவரை புண்படுத்தியிருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன். சில கூடுதல் தெளிவுபடுத்தல்களை வழங்க விரும்புகிறேன்: செஸ் ஹராம் அல்ல."
2023 இல் திவ்யாவுடனான ஆட்டம் மற்றும் இதே போன்ற சம்பவம் நடந்தது. அதை குறிப்பிட்டு பேசிய அவர், "நான் முன்பு செய்ததை இப்போது எனக்கு தவறாகக் கருதுகிறேன். நான் எனது தனிப்பட்ட நம்பிக்கைகளின்படி செயல்படுகிறேன். இருப்பினும், மற்றவர்கள் எதிர் பாலினத்துடன் கை குலுக்காமல் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை, அல்லது பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது அவர்களின் விருப்பம்." என்றார்.
மேலும், "இன்று, நான் இந்த விஷயத்தை என்னுடன் விளையாடிய இரினா புல்மாகாவுடன் இது பற்றி பேசினேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இருப்பினும், நான் விளையாடும் அரங்கத்திற்கு வந்தபோது, நடுவர்கள் என்னை குறைந்தபட்சம் "நமஸ்தே"வுடன் எனது எதிராளியை வரவேற்க வேண்டும் என்று தெரிவித்தனர். திவ்யா மற்றும் வைஷாலிக்கு எதிரான எனது ஆட்டங்களில், இதை முன்கூட்டியே தெரிவிக்க முடியவில்லை, இது ஒரு சங்கடமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது," என்று விளக்கம் அளித்து இருந்தார்.