துலீப் கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்.. டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல் ஆடி அவுட்
பெங்களூரு: துலீப் கோப்பை 2026 தொடரில் ஈஸ்ட் ஜோன் மற்றும் நார்த் ஈஸ்ட் ஜோன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முதல் நாளில், இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி வெறும் ஆறு பந்துகளில் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அவர் திரும்பிய விதம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வைபவ் சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில், இஷான் கிஷன் தலைமையிலான ஈஸ்ட் ஜோன் அணி முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்டது. வைபவ் சூர்யவன்ஷி, அனுபவம் வாய்ந்த அபிமன்யு ஈஸ்வரனுடன் இணைந்து தொடக்க வீரராகக் களம் இறங்கினார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் பிஷ்வோர்ஜித் கொன்தௌஜம் வீசிய புதிய பந்தை எதிர்கொண்ட இந்த இடது கை பேட்ஸ்மேன், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார்.
ஆனால், அடுத்த இரண்டு பந்துகளிலேயே அவர் ஆட்டமிழந்தார். பந்து வீச்சாளர் விக்கெட்டுக்கு வெளியில் இருந்து வீசிய பந்தின் பவுன்ஸைக் கணித்து கட் ஷாட் ஆட வைபவ் முயன்றார். எனினும், பந்து நேராக கல்லி திசையில் நின்றிருந்த ஃபீல்டரிடம் தஞ்சமடைந்ததால், அவரது குறுகிய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்த உள்நாட்டுத் தொடரில் ஈஸ்ட் ஜோன் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் இதுவரை 8 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடி, 17.25 சராசரியுடன் 207 ரன்கள் எடுத்துள்ளார். துலீப் கோப்பை 2026 தொடருக்கு முன்பு, 2024-25 ரஞ்சி கோப்பை சீசனில் பீகார் அணிக்காக மேகாலயாவுக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி சிவப்பு பந்து போட்டியாகும்.
அதில் அவர் தனது சிறந்த ஸ்கோரான 93 ரன்களை எடுத்திருந்தார். இப்போட்டியைப் பொறுத்தவரை, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரனும் விரைவில் ஆட்டமிழந்தார். இதனால் ஈஸ்ட் ஜோன் அணி 8 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

