வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அடித்த ரன்கள் என்ன? 2 இமாலய சிக்சர் அடித்து அசத்தல்
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி இரண்டு சிக்ஸர்களை அடித்து அசத்தினார். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்சி இன்று முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதன் மூலம் இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தார்.

ஆடுகளம் காய்ந்த நிலையில் இருந்தாலும் வானம் மேகமூட்டத்துடன் காற்றின் வேகம் அதிகமாகவும் இருந்ததால் பவுலர்கள் முதல் சில ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தினர்.ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் பந்தை தொட முடியாமல் அபிஷேக் ஷர்மா மற்றும் வைபவ் சூரியவன்சி இருவருமே தடுமாறினர்.
மறுபுறம் இங்கிலாந்து அணியிலும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் தனது டி20 அறிமுகத்தைப் பெற்றுள்ளார். மேலும் அனுபவ வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் அறிமுக வீரர் வைபவ் சூரியவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி அடிக்க, சற்றே தடுமாற்றத்துடன் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஜோஷ் டங் வீசிய இரண்டாவது ஓவரில் வைபவ் சூரியவன்ஷி தனது சர்வதேச கிரிக்கெட்டின் முதல் ரன்னை எடுத்து கணக்கைத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் வைபவ் சூரியவன்ஷி ஒரு அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதே ஓவரில் அபிஷேக் சர்மாவும் ஒரு பவுண்டரியை விளாசினார். ஜோஷ் டங் வீசிய 4வது ஓவரிலும் இந்திய பேட்டர்கள் அதிரடியைத் தொடர்ந்தனர். அந்த ஓவரின் முதல் பந்திலேயே வைபவ் சூரியவன்ஷி மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து மிரட்டினார். அதைத்தொடர்ந்து அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து ரன் ரேட்டை மளமளவென உயர்த்தினார்.
தற்போது 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா 18 ரன்களுடனும், வைபவ் சூரியவன்ஷி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது உடனடியாக ஸ்பின்னரான வில் ஜாக்சை பந்துவீச ஹாரி புருக் அழைத்தார். அப்போது முதல் 2 பந்துகளும் பவுண்டரிகளை அபிஷேக் அடித்தார். அதே ஓவரில் சிங்கிள்ஸ் எடுத்த பிறகு வைபவ் வில் ஜாக்சை எதிர்கொண்ட போது விக்கெட் கீப்பரிடம் ஸ்டம்ப் அவுட் ஆனார். தனது முதல் இன்னிங்சில் 10 பந்துகளில் வைபவ் 14 ரன்கள் எடுத்தார்.


Click it and Unblock the Notifications

