வைபவ் சூர்யவன்ஷி தேர்வு முறையை குறை சொல்வதா? பிசிசிஐ யாருக்கும் அநீதி செய்யல.. ராஜூவ் சுக்லா கண்டனம்
மும்பை: வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்திய அணியின் வீரர்கள் தேர்வு முறையை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆதரித்துப் பேசியுள்ளார். சமூக ஊடகங்களின் அழுத்தத்தால் அல்லாமல், முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையிலேயே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதற்கு வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வே சாட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியதன் மூலம், பல வாரங்களாக நீடித்து வந்த எதிர்பார்ப்புகளுக்கு சூர்யவன்ஷி முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம், வெறும் 15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

அயர்லாந்து தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின் போது, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட டாப் ஆர்டருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை அளித்ததால், வைபவ் தொடக்கத்தில் அணியில் சேர்க்கப்படவில்லை.ஆனால், சஞ்சு சாம்சனின் தொடர்ச்சியாக மோசமாக விளையாடியதால், அணியில் இடம் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முடியாதவாறு செய்துவிட்டது.
"சர்வதேச போட்டியில் தடம் பதித்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிசிசிஐ யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. தகுதியுள்ள வீரர்களுக்கு உரிய நேரத்தில் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியதுடன், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், உண்மை நிலை அதுவல்ல," என்று சுக்லா கூறினார்.
"சரியான தருணம் வரும்போது அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் சமீபத்தில் தான் கூறியிருந்தேன். நேற்று அது நிறைவேறியுள்ளது. எதிர்காலத்தில் அவர் சிறப்பாக விளையாடி, தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். இது அணி நிர்வாகத்தின் மிகச் சிறந்த முடிவு, இதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷி தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை சற்று பதற்றத்துடன் தொடங்கினாலும், 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினார். இடதுகை தொடக்க ஆட்டக்காரரான அவர், வில் ஜாக்ஸ் பவுலிங்கில் ஸ்டம்பிங் செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
அவரது அறிமுக ஆட்டத்தில், 191 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வெற்றிகரமாகத் துரத்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேக்கப் பெத்தேலின் அதிரடி ஆட்டத்தால் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications

