நீயெல்லாம் மனுஷனே இல்லை தம்பி.. 29 பந்தில் 94 ரன்கள்.. இலங்கையை வதம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!
தம்புலா: இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஏ அணிக்காக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 8 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 94 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் இலங்கை வீரர்களே கைதட்டி அவரை பாராட்டி அனுப்பி வைத்தனர்.
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்து இந்தியா ஏ அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் இதற்கு முன் மோதிய லீக் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அப்போது இலங்கை ஏ அணி வென்ற போது, வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை வீரர்கள் வம்புக்கு இழுத்தனர். இதனால் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் அசராமல் இலங்கை வீரரை தள்ளிவிட்டு பதிலடி கொடுத்தார்.

இதனால் இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இதன்பின் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பிரியன்ஷ் ஆர்யா - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி சந்தித்த முர்தல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, 3வது ஓவரில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 26 ரன்களை விளாசினர். தொடர்ந்து 11 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்தார்.
அந்த 11 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி மற்றும் ஒரு டாட் பாலினை வைபவ் சூர்யவன்ஷி ஆடி இருந்தார். இதன்பின் கொஞ்சம் கூட அதிரடியை குறைக்காத வைபவ் சூர்யவன்ஷி, சிக்ஸ் மற்றும் பவுண்டரியிலேயே இலங்கை பவுலர்களை டீல் செய்தார். இந்திய அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்களாக உயர்ந்தது.
இதனால் 10 ஓவர்களுக்கும் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 94 ரன்கள் எடுத்திருந்த போது, பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு வைபவ் சூர்யவன்ஷி அடித்த ஷாட், நேராக மிட் ஆஃப் திசையில் இருந்த வியாஸ்காந்த் வசம் கேட்ச்சானது. இதனால் 94 ரன்களில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து சாதனை சதத்தை தவறவிட்டார்.
வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய பின் இலங்கை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். அதேபோல் கடந்த போட்டியை போல் அல்லாமல் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வெளியேறும் போது இலங்கை விக்கெட் கீப்பர் மற்றும் சக வீரர்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனர். இதனால் ஒரு நொடி ரசிகர்கள் கண்முன் பொட்டு வைத்த தங்கக்குடம் பாட்டு நினைவுக்கு வந்தது என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications