வைபவ் சூர்யவன்ஷிக்கு இனி தான் சவால்கள் காத்திருக்கு.. முன்னாள் பயிற்சியாளர் எச்சரிக்கை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வரவிருக்கும் சவால்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம், இந்திய அணிக்காக விளையாடிய மிக இளைய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
இருப்பினும், சூர்யவன்ஷியின் அறிமுக இன்னிங்சில் அவர் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அதே வேளையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் பந்துவீச்சில் தலா ஒரு சிக்ஸர் அடித்து, தான் ஏன் எதிர்கால சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் என்பதற்கான திறனையும் இந்த இடதுகை ஆட்டக்காரர் வெளிப்படுத்தினார்.

வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச கிரிக்கெட் வருகை குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அபிஷேக் நாயர், "வைபவ் சூர்யவன்ஷிக்கு உண்மையான சவால்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. முதல் போட்டி எப்போதும் எளிதானது தான். ஆனால், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் நேரம் செல்லச் செல்ல இது கடினமாக மாறும். அவரிடம் திறமை இருப்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அவரது மன உறுதிக்கு பெரிய சோதனை காத்திருக்கிறது. அவருக்கு முழு சுதந்திரம் அளித்து விட்டு நாம் சற்று தள்ளி நின்றால், அவர் நிச்சயம் வெற்றியடைவார்" என்று கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களில் வைபவ் தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்தார். அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இளம் வீரர், ஐபிஎல் 2026 தொடரில் 237-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட இந்த இளம் இடதுகை தொடக்க ஆட்டக்காரர், நாட்டில் உள்ள மற்ற 15 வயது சிறுவர்களுக்கான எதிர்பார்ப்பு எல்லையை மிக உயரமாக அமைத்துள்ளார் என்று நாயர் கருதுகிறார்.இதுகுறித்து பேசிய நாயர், "இந்தியாவில் உள்ள மற்ற 15 வயது சிறுவர்களை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது.
அவர்களின் பெற்றோர் சோபாவில் அமர்ந்து கொண்டு, 'அங்கே பார், வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்? நீ என்ன செய்கிறாய்?' என்று நிச்சயம் கேட்பார்கள். எனவே, மற்ற 15 வயது சிறுவர்களுக்கு இது ஒரு கடினமான காலம் தான். இந்த 15 வயதில் அவரிடம் இருக்கும் ஒரே சாதகமான விஷயம் என்னவென்றால், அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. ஒரு 15 வயது சிறுவனாக எதையும் யோசிக்காமல் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு அவரிடம் உள்ளது" என்றார்.
"அவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக வெளி உலக எதிர்பார்ப்புகளின் அழுத்தம் அவர் மீது விழும். இப்போது அவர் வீடு திரும்பும் போது வாழ்த்துக்களும் செய்திகளும் குவியும் என்பதால், தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்துவது அவருக்கு கடினமாக இருக்கும். எனவே, இந்த சூழலை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதும், இந்திய அணியின் நிர்வாகிகள் அவருக்காக உருவாக்கும் சூழலும் மிகவும் முக்கியமானது" என்று விளக்கினார். துரதிர்ஷ்டவசமாக, வைபவ்வின் அறிமுகப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications

