10 வயதில் அண்ணன் வைபவ் சூர்யவன்ஷிக்கு சவால்.. தம்பி ஆசிர்வாத் அடித்த அதிரடி சதம்.. பாராட்டு பதிவு
பாட்னா: கிரிக்கெட் உலகில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து சாதனை படைத்து வரும் வேளையில், அவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு இளம் வீரர் வந்திருக்கிறார். வைபவ்வின் 10 வயது தம்பியான ஆசிர்வாத் சூர்யவன்ஷி, பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
சமஸ்திபூரில் உள்ள தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடிய ஆசிர்வாத் சூர்யவன்ஷி, பயிற்சிப் போட்டி ஒன்றில் 87 பந்துகளை எதிர்கொண்டு 103 ரன்கள் குவித்தார். தனது அண்ணனைப் போலவே பவுண்டரிகளை விளாசுவதில் ஆர்வம் காட்டிய அவர், தனது அதிரடி இன்னிங்ஸில் 20 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து அசத்தினார். தம்பியின் இந்த சிறந்த ஆட்டத்தின் ஸ்கோர்கார்டு புகைப்படத்தை வைபவ் சூர்யவன்ஷி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த வைபவ்
மறுபுறம், அண்ணன் வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 800 ரன்கள் குவித்து அசத்திய அவர், ஆரஞ்சு தொப்பியை வென்ற மிக இளவயது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த சீசனில் அவர் தனது 2-வது ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.
தற்போது இலங்கை மண்ணில் முத்தரப்பு தொடரில் பங்கேற்றுள்ள இந்தியா ஏ அணியில் வைபவ் இடம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவர் விளையாட உள்ளார். இந்திய அணியில் இடம் பெற்ற மிக இளவயது வீரரான வைபவ், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து மிக இளவயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற இருக்கிறார்.
டேல் ஸ்டெயின் புகழாரம்
சமீபத்தில் வைபவ்வின் அசாத்திய திறமையைக் கண்டு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின் வியந்து பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், "சச்சின், விராட் கோலி போன்ற வீரர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள், இந்த சிறுவன் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அளவில் வரப் போகிறான். தனது வாழ்க்கையின் இறுதியில் அவர்கள் இருவரையும் விட பெரிய வீரராக வைபவ் விளங்குவார். எனவே, இவரை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை. சிறந்த பொறுப்புகளுடன் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்றாலும், நாம் அவரை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரை இழந்துவிடும் அபாயமும் உள்ளது" என்று எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
