மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்கள் முதல் போட்டியில் மோத உள்ளன. இந்தப் போட்டியில் இருந்தே வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனத்தை குறி வைப்பார்கள் என பதான் கூறி இருக்கிறார்.
ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய இர்பான் பதான், "வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த ஐபிஎல் சீசன் பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர், அதன்பிறகு உள்ளூர் போட்டிகள், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை, ரஞ்சி கோப்பை என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி ரன்களைக் குவித்து வருகிறார். இதனால் எதிரணி பந்துவீச்சாளர்கள் அவரது ஆட்ட வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து, அவரது பலம் மற்றும் பலவீனங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் எளிதாக சதங்களை விளாசி வருகிறார். இப்படித் தொடர்ந்து ரன்களைக் குவிக்கும் போது ஒரு வீரரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் அனைத்து பந்துவீச்சாளர்களும் அவருக்கு எதிராகத் தெளிவான வியூகங்களுடன் வருவார்கள். அதனை எதிர்கொண்டு தனது திறமையை அவர் எப்படி மேம்படுத்திக் கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது வெற்றி அமையும். இந்த சீசனில் அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்தால் அவர் தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்திவிட்டார் என்று கூறலாம்" என்று தெரிவித்தார்.

கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் தனது 13 ஆவது வயதில் 1.1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஒப்பந்தமான வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கடந்த சீசனில் 7 இன்னிங்ஸ்களில் 252 ரன்கள் எடுத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 439 ரன்கள் குவித்த அவர், 30 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து பல சாதனைகளை முறியடித்து வரும் அவர், ஐபிஎல் 2026 தொடரிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்துவாரா என்று பார்க்கலாம்.
