மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இத்தனைக்கும் அவருடைய வயது 14 என்பதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் ஆச்சரியப்படுத்துகிறது.
14 வயதில் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்கிறார் என்று பலரும் அவரை பாராட்டி வந்தனர். எனினும் வைபவ் சூரியவன்ஷியின் வயது அதிகமாக தான் இருக்கும் என்றும், அவர் பொய் சொல்கிறார் என்றும் பலரும் குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளத்தில் வைத்தனர்.

இந்த நிலையில் வைபவ் சூரியவன்ஷியின் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அதில் வைபவ் சூர்யவன்ஷி, தன்னுடைய பிறந்த வருடத்தை மாற்றி கூறியிருக்கிறார். அதுபடி பார்த்தால் தற்போது வைபவ் சூர்யவன்சிக்கு 15 வயதுக்கு மேல் ஆகி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வைபவ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வயது குறைத்து கூறியிருப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில் இதுபோன்ற சர்ச்சையை தவிர்க்க வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வயதை நிர்ணயிக்கும் எலும்பு அடர்த்தி சோதனையை செய்ய பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது. 2026 ஆம் ஆண்டை கணக்கிட்டு சோதனை நடத்தப்பட்டால் எலும்பு அடர்த்தி பதினாறு புள்ளி நான்கு வயதில் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் குறிப்பிட்ட வீரர் ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்.
தற்போது வைபவ்க்கு 16.4 என்ற வயதை விட குறைவாக எலும்பு அடர்த்தி சோதனையில் இருப்பது தெரிய வந்தால் அவருக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை. அண்டர் 19 கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு சர்ச்சை ஏற்படுவதால் 16 வயதிலேயே அனைத்து வீரர்களுக்கும் இந்த சோதனையை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் வைபவ் தொடர்பான இந்த புதிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள தந்தை சஞ்சீவ் வைபவ், "நீங்கள் எந்த சோதனை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு அதில் எந்த ஒரு பயமும் இல்லை. ஏனென்றால் எட்டு வயது இருக்கும் போதே பிசிசிஐ அவருக்கு எலும்பு அடர்த்தி சோதனை செய்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவர் ஏற்கனவே இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடி இருக்கிறார். இதனால் அவருக்கு மீண்டும் சோதனை நடத்தப்படுவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.