“எல்லை மீறிப் போய்விட்டீர்கள்”.. வைபவ் சூர்யவன்ஷி, திலக் வர்மாவுக்கு தண்டனை கொடுத்த பிசிசிஐ
மும்பை: இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, இந்திய 'ஏ' அணியின் கேப்டன் திலக் வர்மா மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு பிசிசிஐ அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தம்புள்ளாவில் கடந்த ஜூன் 15 அன்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில், இலங்கை 'ஏ' அணி சூப்பர் ஓவர் முடிவில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கும் போது, இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே, "வீட்டுக்குப் போ, இது ஐபிஎல் கிடையாது" என்று வைபவ் சூர்யவன்ஷியை வம்புக்கு இழுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 15 வயது வைபவ், ஹாலம்பகேவின் நெஞ்சில் தள்ளி மோதலில் ஈடுபட்டார்.

இந்த ஒழுங்கீன செயலை விசாரித்த போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் அளித்த பரிந்துரையின்படி, வைபவ் சூர்யவன்ஷிக்கு அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக பிசிசிஐ விதித்துள்ளது. அதேபோல, வம்புக்கு இழுத்த இலங்கை வீரர் ஹாலம்பகேவுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் 50 சதவீத அபராதம் விதித்துள்ளது.
நடுவர்களுடன் மோதிய திலக் வர்மா
இதற்கிடையே, மைதானத்தில் நடுவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய 'ஏ' அணியின் கேப்டன் திலக் வர்மாவிற்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. சூப்பர் ஓவர் நடத்துவது, நோ-பால் சர்ச்சை மற்றும் போதிய வெளிச்சமின்மை ஆகிய விவகாரங்களில் திலக் வர்மா கள நடுவர்களிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதமாக பிசிசிஐ விதித்துள்ளது. மேலும், சண்டையைத் தடுத்து நிறுத்திய இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவுக்கும் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 'ஏ' அணிகள் விளையாடும் போட்டிகளில் ஐசிசி நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காது என்பதால், அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில், "இந்திய 'ஏ' அணி ஒரு முக்கியமான முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. மூத்த அணியில் இடம்பிடிக்கத் துடிக்கும் இளம் வீரர்கள், இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளில் கவனம் செலுத்தாமல் தங்களது விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
