மும்பை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அண்டர்-19 அணியின் கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (U19) கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், வைபவ் சூர்யவன்ஷியை கேப்டனாக நியமித்து இருக்கிறது பிசிசிஐ.
தற்போதைய இந்திய அண்டர் 19 கேப்டனான ஆயுஷ் மத்ரே மற்றும் துணை கேப்டன் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் காயமடைந்ததைத் தொடர்ந்து, இந்த பொறுப்பு வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள அண்டர் 19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மத்ரே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட விஹான் மல்ஹோத்ராவுக்கும் இதேபோன்ற காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவர்கள் இருவராலும் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சிகிச்சை பெறுவார்கள். சிகிச்சை முடிந்து குணமடைந்த பிறகு, உலகக் கோப்பைத் தொடரின் போது மீண்டும் அணியுடன் இணைவார்கள்.
கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் காயமடைந்ததால், சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அண்டர் 19 ஒருநாள் தொடரில் ஆரோன் ஜார்ஜ் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படுவார்.
பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, மிக இளம் வயதிலேயே கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில், அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக வெறும் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார்.
இவரது திறமையைக் கண்டு வியந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2025 ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்கியது. 2025 ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிவேக ஐபிஎல் சதத்தை அடித்தார். பீகார் மாநில ரஞ்சி கோப்பை அணியின் துணை கேப்டனாகவும் இவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, இந்திய அண்டர் 19 அணி தென்னாப்பிரிக்காவியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் பெனானி நகரில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
முதல் போட்டி: ஜனவரி 3 (சனிக்கிழமை)
இரண்டாவது போட்டி: ஜனவரி 5 (திங்கட்கிழமை)
மூன்றாவது போட்டி: ஜனவரி 7 (புதன்கிழமை)
வைபவ் சூர்யவன்ஷி (கேப்டன்), ஆரோன் ஜார்ஜ் (துணை கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிஞான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வansh சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ரிஷ், கனிஷ்க் சவுகான், கிலன் ஏ படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன், யுவராஜ் கோஹில், ராகுல் குமார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றம் தென்னாப்பிரிக்கா தொடருக்கு மட்டுமே. ஜனவரி 15-ம் தேதி ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு ஆயுஷ் மத்ரேவே கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதற்குள், வைபவ் சூர்யவன்ஷி தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.