மும்பை: இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயதை எட்டியதைத் தொடர்ந்து, இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசியின் விதிமுறைகளின்படி தகுதி பெற்றுள்ளார். U19 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் கொண்ட இவர், ஐபிஎல் 2025 தொடரிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
மார்ச் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய வைபவ் சூர்யவன்ஷி, 2026 ஐபிஎல் சீசனுக்கு முந்தைய தினம் 15 வயதைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச வயதுத் தகுதியை அவர் அடைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விதிமுறைகள், ARTICLE 4.1-ன் படி, ஒரு வீரர் தனது தேசிய அணியை சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு குறைந்தது 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். இப்போது இந்த நிபந்தனை பூர்த்தியாகியிருப்பதால், சூர்யவன்ஷி அதிகாரப்பூர்வமாக இந்திய சீனியர் அணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹1.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டபோது உலகளாவிய கவனத்தை ஈர்த்தார். ஐபிஎல் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். சில நாட்களிலேயே, அவர் 35 பந்துகளில் சதம் அடித்து, தொடரின் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் என்ற சாதனையைப் படைத்தார்.
அவரது பயணத்தின் உச்சக்கட்டமாகக் கருதப்படுவது U19 உலகக் கோப்பை 2026. அதில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது தான். இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் (30 பவுண்டரிகள் உட்பட) குவித்து வரலாறு படைத்தார். இத்தொடரில் 'தொடரின் சிறந்த வீரர்' விருதையும் தட்டிச் சென்றார்.
உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சூர்யவன்ஷி மிரட்டியிருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்ற அவர், விஜய் ஹசாரே டிராபியில் 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து, ஏபி டி வில்லியர்ஸின் அதிவேக 150 ரன்கள் சாதனையை முறியடித்தார். ரஞ்சி டிராபியில் 93 ரன்கள் அடித்து, சிவப்புப் பந்து கிரிக்கெட்டிலும் தனது திறமையைப் பறைசாற்றினார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஒரு நாட் அவுட் சதமடித்தும், இந்தியா 'ஏ' அணிக்காக 42 பந்துகளில் 144 ரன்கள் விளாசியும் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தினார்.

இந்திய அணி தற்போது ஒரு மாற்றத்திற்கான காலகட்டத்தில் இருக்கும் நிலையில், , சூர்யவன்ஷிக்கு சீனியர் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகிறது. அவர் உடனடியாக அறிமுகமாவாரா என்பது உறுதியாக இல்லை என்றாலும், 2027 உலகக் கோப்பை மற்றும் 2028 ஒலிம்பிக் போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு எதிர்காலத்தில் அவர் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும்.