தனியாக அமர்ந்து அழுத வைபவ் சூர்யவன்ஷி.. கம்பீர் முடிவால் உடைந்து போன சிறுவன்.. என்ன நடந்தது?
சவுதாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, பிளேயிங் லெவனில் தனக்கு இடமில்லை என்பதை அறிந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தில் பவுண்டரி எல்லைக் கோட்டுக்கு வெளியே தனியாக அமர்ந்து அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி, சச்சினை முந்தி இந்தியாவின் இள வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய 3 போட்டிகளில் அவர் முறையே 13, 14, 15 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். இதனால், கடைசி போட்டியான சவுதாம்ப்டன் டி20 போட்டியில் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவு செய்தார்.

போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக, இந்திய அணியில் தனக்கு இடமில்லை என்ற செய்தியை அறிந்ததும் வைபவ் சூர்யவன்ஷியால் தனது சோகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முந்தைய போட்டிகளில் சரியாக விளையாடாததால் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்பதை உணர்ந்த அந்த 15 வயது சிறுவன், மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். மைதானத்தின் ஓரத்தில் சோகமான முகத்துடன் அவர் அமர்ந்திருந்த உருக்கமான காட்சிகள் இணையத்தில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரை 0-4 என்ற கணக்கில் முழுமையாகப் பறிகொடுத்தது. இங்கிலாந்து 257 ரன்கள் குவிக்க, இந்தியா 201 ரன்களுக்கு சுருண்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தால் 257 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் 131 ரன்கள் குவித்தார். 258 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 56 ரன்களும், திலக் வர்மா 53 ரன்களும் எடுத்தனர்.


Click it and Unblock the Notifications

