மும்பை: U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த சூழலில், 14 வயதான வீரராக இருந்தாலும் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். வெறும் 14 வயதிலேயே சூரியவன்ஷி ஒரு ஐபிஎல் கோடீஸ்வரராக உருவாகி, லீக்கில் இளைய வயதில் சதம் அடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருந்தார்.

இளையோர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் தவிர கிட்டத்தட்ட அனைத்து பேட்டிங் சாதனைகளையும் தகர்த்தெறிந்துள்ள சூரியவன்ஷி, 19 வயதுக்குள் என்னவெல்லாம் சாதிக்கப் போகிறார் என்பது கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், யு19 உலகக் கோப்பையை பலமுறை வென்ற வீரர் என்ற பெருமையை அவரால் ஒருபோதும் பெற முடியாது.
அடுத்த அண்டர் 19 உலககோப்பை 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அப்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 16 வயது தான் ஆகும். இதனால், அவரை ஏன் மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அதற்கு காரணம் பிசிசிஐ போட்ட விதி ஒன்று. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, ஒரு கிரிக்கெட் வீரர் யு19 உலகக் கோப்பைத் தொடரில் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும் என்று பிசிசிஐ விதி வகுத்துள்ளது.
2016 ஜூன் மாதம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், ஜூனியர் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் பிசிசிஐ இந்த விதியை அங்கீகரித்தது. இதன் காரணமாக தான் வைபவ் சூர்யசன்ஷியால் அடுத்த அண்டர் 19 உலககோப்பை தொடரில் 16 வயதில் இருந்தும் விளையாட முடியாது. ஆனால், அதற்குள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் இடம்பெற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.