ஜெய்ப்பூர்: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்ததை பற்றி கிரிக்கெட் உலகம் வியந்து பேசி வருகிறது. ஆனால் அதற்காக அவர் செய்த தியாகம் மிகவும் பெரியது. 14 வயதில் நினைத்ததை சாப்பிட முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இதுவரை மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் வைபவ், பார்ப்பதற்கு கட்டுக்கோப்பாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் அதிக அளவில் கோழி மற்றும் ஆட்டுக் கறி சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அது அவருக்கு சக்தியை அளித்தாலும், கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையான உடல் தகுதி குறையலாம் என்பதால், அவரது பயிற்சியாளர் மணிஷ் ஓஜா அவருக்கு உணவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார். பிட்சா மற்றும் ஆட்டுக் கறி ஆகியவற்றை இனி சாப்பிடக் கூடாது என மணிஷ் ஓஜா வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
அவருக்கென என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்ற அட்டவணையையும் தயாரித்து அளித்து இருக்கிறார். அதற்கு முன்பு வரை வைபவ், தனக்கு பிடித்தமான உணவு பட்டியலில் பிட்சா மற்றும் ஆட்டுக்கறியை வைத்திருந்திருக்கிறார்.
இது குறித்து அவரது பயிற்சியாளர் மணிஷ் ஓஜா பேசுகையில், "வைபவ் சூர்யவன்ஷி ஆட்டுக்கறி உண்பதற்கு நான் அனுமதிக்கவில்லை. அவருடைய உணவு பட்டியலில் இருந்து பீட்சாவையும் நான் நீக்கிவிட்டேன். அவர் கோழி மற்றும் ஆட்டுக்கறி மீது அதிக ஆசை உள்ளவர். அவர் சிறுவயதை உடையவர் என்பதால் பிட்சா மீதும் அவருக்கு மோகம் உண்டு. ஆனால், இனி அவர் அதை சாப்பிடுவதில்லை. நாங்கள் அவருக்கு ஆட்டுக்கறியை அளித்த போது, நாங்கள் எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் அவர் சாப்பிட்டு விடுவார். அதனால்தான் அவர் பார்ப்பதற்கு இப்போது சற்று பருமனாக இருக்கிறார்" என்றார்.
முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வைபவ் சூர்யவன்ஷி பற்றி வெளியிட்டிருக்கும் பதிவிலும் இது போன்ற ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதாவது, "மற்ற சிறுவர்கள் 14 வயதில் கனவு கண்டுக்கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த சிறுவன் ஐபிஎல்-ல் சாதனை செய்து கொண்டிருக்கிறான்" என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் 14 வயதில் ஒரு சிறுவன் தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு வெளியில் சுற்றிக் கொண்டுதான் இருப்பான். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி அந்த சுதந்திரத்தை தியாகம் செய்து தான் ஐபிஎல் தொடரில் சாதனை படைத்து இருக்கிறார்.