மும்பை: 2026ஆம் ஆண்டு U19 உலககோப்பையை 6வது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசி வைபவ் முதலிடத்தை பிடித்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் இன்னிங்ஸை விளாசி, வைபவ் தனது ஊரான சமஸ்திபூர் மற்றும் குடும்பத்திற்கு பெருமை சேர்த்தார்.
இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வைபவ் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடங்கிய அதிரடி இன்னிங்ஸை ஆடினார். மகனின் ஆட்டத்தை கண்ட தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி பெருமிதம் கொண்டார்.

இது குறித்து பேசிய அவர்: "வைபவ் கிரிக்கெட் ஆடத் தொடங்கியதிலிருந்து இது ஒரு கனவு. இன்று அந்தக் கனவு நனவாகிவிட்டது. எங்கள் பிள்ளைகள் ஒன்றாகக் கடுமையாக உழைத்தார்கள், நாட்டின் ஆசீர்வாதம் அவர்களுடன் இருப்பதை உணர்ந்தோம்" என்றார்.
"அவன் யாருக்கும் அஞ்ச மாட்டான். குழந்தையாக இருந்ததிலிருந்தே சிறந்த பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்பவன். இன்று, அவன் நாட்டுக்காக விளையாடினான். அவனது ரன்கள் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது," என்றார். வைபவ், 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில், இறுதி மற்றும் தொடரின் சிறந்த வீரர் என இரண்டு விருதுகளையும் வென்ற முதல் கிரிக்கெட் வீரரானார்.
இந்த சாதனை வெற்றி குறித்து பேசிய மாமா ராஜீவ், "இந்தியா 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை வென்றதில் எங்கள் குடும்பமும், பகுதி மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைபவ் இத்தொடரில் 30 சிக்ஸர்கள் அடித்து, U19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளார்" என்றார்.
"வைபவ் மிக விரைவில் இந்திய சீனியர் அணியில் சர்வதேச அளவில் விளையாடுவார் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது," என்று ராஜீவ் கூறினார். இந்த வெற்றி, வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலத்திற்கு ஒரு பிரகாசமான பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.