வைபவ் சூர்யவன்ஷிக்கு கோலியின் சர்ப்ரைஸ் பரிசு.. சச்சின் பாராட்டிய சில மணி நேரத்தில் அடுத்த மகிழ்ச்சி
அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று கொண்டாடிக் கொண்டு இருந்த போதும் மைதானத்தில் அனைவரது கவனமும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி பக்கமே திரும்பி இருந்தது. சச்சின் டெண்டுல்கரின் பாராட்டைப் பெற்ற சில மணி நேரங்களிலேயே, மைதானத்தில் விராட் கோலி அவரிடம் வந்து பேசியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தோள் மீது கைபோட்ட கோலி
2026 ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வைபவ் சூர்யவன்ஷி அருகே வந்து அவரிடம் பேசினார். வைபவ்வின் தோள் மீது கைபோட்டவாறு கோலி சில நிமிடங்கள் அவரிடம் உரையாடினார். இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது தெரியவில்லை என்றாலும், கோலியின் இந்த அன்பான செயல் வைபவ்விற்கு மிகப்பெரிய பரிசாக அமைந்தது.

இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், வைபவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அஜீத் அகர்கர் முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார். இந்த சீசனின் தொடக்கத்திலேயே கௌகாத்தியில் நடந்த போட்டிக்குப் பிறகு வைபவ்வின் தொப்பியில் கோலி கையெழுத்திட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
விருதுகளை அள்ளிய வைபவ்
இந்த 2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 5 விருதுகளை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளார். 15 வயதான அவர் வென்ற விருதுகள்:
- சீசனின் மதிப்புமிக்க வீரர் (MVP)
- அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி (776 ரன்கள்)
- வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரர்
- சூப்பர் ஸ்டிரைக்கர் (237.30 ஸ்டிரைக் ரேட்)
- சூப்பர் சிக்ஸஸ் (72 சிக்ஸர்கள்)
தகர்க்கப்பட்ட உலக சாதனைகள்
இந்த சீசனில் 72 சிக்ஸர்களை விளாசி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை (59 சிக்ஸர்கள்) வைபவ் முறியடித்தார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் மற்றும் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட்டின் சாதனையையும் தகர்த்துள்ளார்.
உடற்தகுதி முக்கியம்
போட்டி முடிந்து ரவி சாஸ்திரியிடம் பேசிய வைபவ், "நான் நீண்ட காலம் காயம் ஏதுமின்றி விளையாட வேண்டும் என்றால் எனது உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அணியில் உள்ள மூத்த வீரர்களும், பயிற்சியாளர்களும் எனக்குப் பெரிய அளவில் ஆதரவு அளிக்கின்றனர்" என்றார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது விஐபி பாக்ஸில் ஜெய் ஷா அருகே அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்தார் வைபவ். அதனால் அவர் விரைவில் இந்திய தேசிய அணியில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரில் 'இந்தியா ஏ' அணிக்காகக் களமிறங்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications
