பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் 7 போட்டிகளில் 252 ரன்கள் அடித்தார்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 206 ஆகும். தாம் விளையாடிய முதல் போட்டியிலே சர்துல் தாக்கூர் போன்ற சர்வதேச வீரர்களின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்து 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.இந்த நிலையில் வைபவ் சூர்யவன்சி இந்திய அணியில் அடுத்த ஸ்டார் வீரராக உருவெடுப்பார் என்று பலரும் கருதினர்.

இந்த தருணத்தில் தான் வைபவம் சூரியவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட் போட்டிக்கு ஆயுஷ் மாத்ரே உடன் தேர்வாகி இருக்கிறார். இந்த தருணத்தில் வைபவ் சூரியவன்ஷி, பங்கேற்ற இந்திய அண்டர் 19 அணிக்கான பயிற்சி ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற வைபவ் சூர்யவன்சி 90 பந்துகளில் 190 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருக்கிறார்.
இதில் அவர் அடித்த ஒவ்வொரு சிக்ஸரும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எனினும் இது பயிற்சி ஆட்டம் என்பதால் இது தொடர்பான ஸ்கோர் கார்டு எதுவும் வெளியாகவில்லை. வைபவ் சூரியவன்ஷி தமக்கு 13 வயது இருக்கும் போதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.தற்போது சூரிய வம்சி இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கப் போகிறார்.
அதிலும் அவர் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தால், சச்சின் டெண்டுல்கரை போல் மிக விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் தனது ஐபிஎல் சீசன் குறித்து கருத்து தெரிவித்திருந்த வைபவ் சூரியவன்ஷி அடுத்த சீசனில் இதைவிட இரண்டு மடங்கு அபாரமாக விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 வயது வீரரான வைபவ் சூரியவன்சியை ராஜஸ்தான் அணி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவ்வளவு இளம் வீரரை இவ்வளவு தொகை கொடுத்து ஏன் எடுத்தீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டனர். மேலும் சர்வதேச வீரர்களின் பந்துவீச்சை அவர் தாக்கு பிடிக்க மாட்டார் என்று பலரும் ஏளனமாக பேசிய நிலையில் தன்னுடைய பேட்டால் வைபவ் சூர்யவம்சி பதில் அளித்து இருக்கிறார்.