லண்டன்: 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி அண்டர் 19 கிரிக்கெட்டில் 52 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்திருக்கின்றார். ஐபிஎல் தொடரில் 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்கள் அவர் அடித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 206 ஆகும். இந்த சூழலில் வைபவ் சூர்யவன்சி இந்திய அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டார்.இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட அவர் அங்கு அண்டர் 19 ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

தற்போது மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் இந்தியா அண்டர் 19 அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னில வகிக்கிறது. தற்போது நான்காவது அண்டர் 19 ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கு முன்பு வரை வைபவ் சூரியவன்சி 48,45, 86 ரன்களை குவித்திருந்தார். இந்த சூழலில் நான்காவது நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே ஐந்து ரன்களில் வெளியேற வைபவ் சூரியவன்சி இங்கிலாந்து பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் ஏழு சிக்ஸர், 10 பவுண்டரிகளை அடித்தார். இதன் மூலம் 52 பந்துகளில் வைபவ் சூரியவன்சி சதம் அடித்தார். இதன் மூலம் அண்டர் 19 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை சூரியவன்சி படைத்திருக்கிறார். இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்துகளில் சதம் அடித்தது சாதனையாக இருந்தது.
அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக அவர் 13 பவுண்டரி, 10 சிக்ஸர் அடித்திருந்தார். இதேபோன்று மற்றொரு வீரரான விஹான் மல்கோத்ரா 129 ரன்கள் குவிக்க இந்திய 19 அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் எடுத்திருக்கின்றது.