வைபவ் சூர்யவன்ஷி குறித்து அஸ்வின் எச்சரிக்கை.. 15 வயது பையனை அவசரப்படுத்த வேண்டாம் என கருத்து
ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள்விளாசி இவர் அதிர்ச்சியை ஏற்படுத்த, இந்திய அணியில் இவரை விரைவில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பீகாரின் சாமஸ்திபூரைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான வைபவ், நான்கு பவுண்டரிகள், ஐந்து சிக்சர்களை விளாசினார். 128 ரன்கள் இலக்கிற்கு, ரியான் பராக் தலைமையிலான அணிக்கு அவர் சிறப்பான தொடக்கம் அளித்தார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ₹1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வைபவ், U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கூட 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஏற்கனவே மிரட்டியவர்.

வைபவின் இந்த ஆட்டத்திற்குப் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. ஆனால், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த இளம் வீரர் மீது இப்போதே அழுத்தம் கொடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
"அவனுக்கு அப்படி ஒரு இலக்கை நிர்ணயிக்காதீர்கள். அவன் இன்னும் குழந்தை. எம்.எஸ். தோனி 45 வயது வரை விளையாடுகிறார் என்றால், வைபவ் சூரியவன்ஷி 40 வயது வரை விளையாடினால், கிரிக்கெட்டில் அவனுக்கு இன்னும் இரண்டரை தசாப்தங்கள் இருக்கின்றன. அவனைத் தனியாக விடுங்கள்; சரியான நேரத்தில் அவனே வருவான்."
"இந்தியாவுக்காக விளையாடாமல் இருக்க முடியாத அளவுக்கு அவன் மிகச் சிறந்தவன். அவன் எப்படியும் விளையாடுவான். எப்போது விளையாடுவான்? அதற்காக நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். நாம் ஏன் எப்போதும் அவசரம் காட்ட வேண்டும்?" என அஸ்வின் கேள்வியெழுப்பினார். வைபவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
"அவனுக்கு 15 வயது. எனவே, 15 பந்துகளில் 50 ரன்கள் அடித்தான். அவன் தன் வயதைக் காட்டுகிறான். என்ன ஒரு திறமையான வீரர்! அவனுடைய பேட் வேகம் எவ்வளவு அதிகம்! சிஎஸ்கே அணிக்கு அவனுக்கு எதிராக எந்தப் பதிலுமில்லை. அவர்கள் களத்தில் சோர்வடைந்த அணியாகக் காணப்பட்டனர். இந்தப் போட்டியிலும் நாங்கள் ஒரு சக்திவாய்ந்த அணி என்பதை ஆர்ஆர் நிரூபித்துள்ளது" என்று அஸ்வின் கூறினார்.


Click it and Unblock the Notifications