வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இடம் கொடுப்பார்களா? சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி
2026 ஐபிஎல் தொடரில் 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்களைச் சிதறடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி நடப்பு சீசனில் அதிக ரன்களைக் குவித்து வருகிறார். இவரை இப்போதே இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால், வைபவ் தயாராக இருந்தாலும் இந்திய அணியின் கதவுகள் அவருக்கு அத்தனை எளிதாகத் திறக்குமா என்பதில் ஒரு பெரிய சிக்கல் இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார்.
15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 404 ரன்களைக் குவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் அவரது ஸ்ட்ரைக் ரேட் ஆகும். 237.64 என்ற அசுர வேகத்தில் அவர் ரன்களைச் சேர்த்து வருகிறார். பும்ரா, ஹேசில்வுட் போன்ற துல்லியமான பந்துவீச்சாளர்களையே தனது அதிரடியால் நிலைகுலையச் செய்துள்ள வைபவ், கிரிக்கெட் உலகின் அடுத்த 'சூப்பர் ஸ்டார்' எனப் புகழப்படுகிறார்.

முன்னதாக சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிர அணிக்கு எதிராகச் சதம் விளாசியது மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் எடுத்தது என இவரது சாதனைகள் நீண்டுகொண்டே செல்கின்றன. வைபவ்வின் இந்த அசுர வளர்ச்சி குறித்துப் பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர், அவர் டி20 கிரிக்கெட்டுக்கு முழுமையாகத் தயாராகிவிட்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினார்.
ஆனால், இந்திய அணியில் இப்போதே அவருக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார் மஞ்சுரேக்கர். "வைபவ் தயாராக இருக்கலாம், ஆனால் அவருக்காக இடத்தை விட்டுக்கொடுக்க மற்ற சீனியர் வீரர்கள் தயாராக இருக்கிறார்களா? ஏனெனில் இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு இப்போது மிகப்பெரிய கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வைபவ் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என மஞ்ச்ரேக்கர் எச்சரித்துள்ளார். டி20 போட்டிகளில் பந்தை விலகி நின்று (Leg side) அடிக்கும் அவரது பாணி டெஸ்ட் போட்டிகளில் எடுபடாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துக்கு மிக அருகில் சென்று விளையாட வேண்டியது அவசியம். 15 வயதில் இத்தகைய திறமையை வெளிப்படுத்துவது வியப்பளித்தாலும், அவரை இப்போதே டெஸ்ட் போட்டிகளில் களம் இறக்குவது சரியான முடிவாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் வைபவ் போன்ற ஒரு அதிரடி வீரர் இந்தியாவுக்குத் தேவை என்றாலும், அவரைச் சரியான நேரத்தில் சர்வதேச அரங்கிற்கு அறிமுகப்படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications