வைபவ் சூர்யவன்ஷி ஆடப் போகும் அடுத்த கிரிக்கெட் தொடர் இதுதான்.. கடும் சவால் காத்திருக்கிறது
மும்பை: சமீபத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தற்போது ஓய்வில் இருக்கும் நிலையில் அவர் அடுத்து ஆட உள்ள கிரிக்கெட் போட்டிகள் குறித்து பார்க்கலாம். விரைவில் துலீப் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. அதில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்க தயாராகி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் வரும் ஆகஸ்ட் 23 அன்று பெங்களூருவில் தொடங்குகின்றன. முதல் சுற்றுப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ள கிழக்கு மண்டல அணி, வடக்கு மண்டல அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 6 அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களம் இறங்குவாரா அல்லது மிடில் ஆர்டரில் விளையாடுவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஒருநாள், டி20 போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பொறுமையும், நீண்ட நேரம் கிரீஸில் நின்று ஆடும் திறமையும் அவசியமாகும். தேவையில்லாத பந்துகளை நேர்த்தியாக தவிர்த்து, கடினமான தருணங்களில் விக்கெட்டை பாதுகாத்து ஆட வேண்டும் என்பதால் வைபவ் மிடில் ஆர்டரில் ஆட அதிக வாய்ப்பு உள்ளது.
முதல் தர கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 2 அரைசதங்களுடன் 207 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 17.25 ஆக மட்டுமே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும் என்றால் தனது டெஸ்ட் செயல்பாட்டை அவர் முன்னேற்ற வேண்டும். தனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த துலீப் கோப்பை தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
