"சஞ்சு ஆடியதில் பிரச்சனை இல்லை.. ஆனால் வைபவை இப்படித்தான் நடத்துவீர்களா" ராயுடு, கவாஸ்கர் விளாசல்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்ட விதம் மற்றும் அதற்கு அவர் காட்டிய எதிர்வினை ஆகியவை குறித்து சுனில் கவாஸ்கர், அம்பதி ராயுடு போன்ற முன்னாள் வீரர்கள் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, வைபவ் சூர்யவன்ஷி அணியில் அறிமுகமாகி ஆடினார். ஐந்தாவது டி20 போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பேசுகையில், "வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றமடைந்த விதத்தைப் பார்த்தால், அவர் விளையாடவில்லை என்ற செய்தி அவருக்கு முந்தைய நாள் இரவே சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது. சஞ்சு சாம்சனை விளையாட வைக்கும் முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். அணி நிர்வாகம் இளம் வீரர்களைச் சுற்றியுள்ள அழுத்தங்களை குறைத்து அவர்களைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் விளையாடக் கூடிய ஒரு திறமையான வீரரை நாம் சரியாகப் பாதுகாக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்" என்றார்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் இந்த முடிவை முற்றிலுமாக எதிர்த்துள்ளார். அவர் கூறுகையில், "சஞ்சு சாம்சன் அணிக்கு வந்ததில் எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், வைபவ் 3வது இடத்தில் விளையாடியிருக்க வேண்டும். அவர் ஏமாற்றத்துடன் மைதானத்தில் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டாரா என்பதை அறிய அவருக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.
அவர் விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட்டு சிக்சர்கள் பறந்தன. எவ்வித எட்ஜ்களும் இன்றி சுத்தமான ஷாட்களை அவர் ஆடினார். 15 வயது சிறுவனை வெறும் 3 போட்டிகளுக்குப் பிறகு அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடினமான ஒன்றாகும். மூத்த வீரர்கள் யாராவது அவரது தோளில் கைபோட்டு, 'இதுவே கடைசி முடிவு அல்ல' என்று ஆறுதல் கூற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அடுத்ததாக ஜூலை 23 அன்று தொடங்க உள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

