மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி நிர்வாகிகள், வைபவ் சூர்யவன்ஷியை உறுதியாக வாங்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது ஏன் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்திருக்கிறார். இதனால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து தேடி வருகின்றனர்.
14 வயது சிறுவனால் எப்படி இது சாத்தியம் என்று ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷியை அடையாளம் கண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.1.1 கோடிக்கு வாங்கியது எப்படி என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் அணியின் மேனேஜரான ரோமி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ஆம் ஆண்டு முதலே இளம் வீரர்களை ஆதரித்து வருகிறது. இளைஞர்களை தயார் செய்து இந்திய அணிக்காக விளையாட வைக்கிறோம். வைபவ் சூர்யவன்ஷியை பொறுத்தவரை யு19 இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அதேபோல் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபி தொடரிலும் அறிமுகமாகி இருந்தார். இதனால் பீகார் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
இதன்பின் ராஜஸ்தான் அணியின் ட்ரையல்ஸ்-க்கு வைபவ் சூர்யவன்ஷியை அனுப்பி வைத்தார்கள். வைபவ் சூர்யவன்ஷி வந்த போது, ராகுல் டிராவிட், ஜூபின் பரூசா, விக்ரம் ரத்தோர் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர். அவர்கள் மூவரும் சேர்ந்து, வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங்கை ஒரு ஓவர் தான் பார்த்தனர். அதன்பின் உடனடியாக அந்த சிறுவனுக்கு திறமை இருப்பதாக தெரிவித்தனர்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பின் வைபவ் சூர்யவன்ஷி கடந்த 3 மாதங்களாக ராஜஸ்தான் அணியின் சிறப்பு திறன் மேலாண்மை மையத்தில் நேரம் செலவிட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து பேட்டிங் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. என்னதான் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்று வாங்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு குழந்தைதான். அதனால் வைபவ் சூர்யவன்ஷியை கவனமாகவே கையாள நினைத்தோம்.
அதன்பின் நாக்பூரில் பயிற்சி மேற்கொண்ட போது, எங்கள் அனைவரையும் மிரள வைத்துவிட்டார். டிராவிட், விக்ரம் ரத்தோர், ஜூபின் ஆகிய மூவரும் சேர்ந்து, இந்த பையன் மீது ஒரு கண் வையுங்கள் என்றார்கள். அவரின் பெற்றோரிடம் பேசுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தனர்.
அதேபோல் ஐபிஎல் மெகா ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷியை வாங்க முடியவில்லை என்றாலும், அவரை தொடர்ந்து கவனியுங்கள் என்று அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட் போன்ற 30 ஆண்டு காலம் கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஜாம்பவானையே ஒரே ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஈர்த்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.