சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த சிறுவனின் ஆட்டத்தைக் கண்டு, அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் மிரண்டுபோய் பாராட்டியுள்ளனர்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியது. எதிர்காலத்திற்கான முதலீடு என்று பலர் நினைத்த நிலையில், கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, வைபவ் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வைபவ், முதல் போட்டியிலேயே அனைவரையும் தன்பக்கம் ஈர்த்தார்.

சமீபத்தில் அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசிய சஞ்சு சாம்சன், வைபவின் ஆட்டம் தன்னை எப்படி ஆச்சரியப்படுத்தியது என்பதைப் பகிர்ந்து கொண்டார். "அவர் தனது முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்தபோது, 'ஓகே.. லக்கில் அடித்துவிட்டார்' என்றுதான் நினைத்தேன். ஆனால், அதன்பிறகும் அவர் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார். அவர் அடித்த ஷாட்களின் தரம் என்னை உண்மையிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கியது" என்று சாம்சன் கூறினார்.
இந்த சீசனில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய வைபவ், 252 ரன்களை 206.55 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். இதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அடித்த சதம் மிகவும் குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன் மட்டுமல்ல, கிரிக்கெட்டின் நுணுக்கங்களை நன்கு அறிந்த அஸ்வினும் வைபவின் ஆட்டத்தால் திகைத்துப்போனார். குறிப்பாக வைபவின் பேட்டிங் திறமையை விட, அவரது விளையாட்டு குறித்த புரிதல் (game awareness) தன்னை மிகவும் கவர்ந்ததாக அஸ்வின் குறிப்பிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியை நினைவு கூர்ந்த அஸ்வின், "நான் ரவுண்ட் தி ஸ்டம்ப்ஸில் இருந்து ஒரு பந்தை வீசினேன். அதை அவர் எளிதாக கவர்ஸில் அடித்தார். அடுத்த பந்தை, அவரை பெரிய ஷாட்டுக்குத் தூண்டும் விதமாக மெதுவாக வீசினேன். சஞ்சு, நான் அப்படி பந்து வீசினால் என்ன செய்வேன் என்று உனக்கே தெரியும்," என்று சாம்சனிடம் கூறினார்.
"ஆனால் வைபவ், அந்த பந்துக்காகக் காத்திருந்து, மிட்-ஆன் திசையில் ஒரு அருமையான ஷாட் அடித்து சிங்கிள் எடுத்தார். நான், 'என்னடா இது... எங்கிருந்து வந்தான் இந்த பையன்?' என்று திகைத்துவிட்டேன். அவருக்கு வயது 14, நான் 18 வருடங்களுக்கு முன்பு ஐபிஎல்லில் அறிமுகமானேன். அப்போது இவர் தன் பெற்றோரின் கற்பனையில் கூட இருந்திருக்க மாட்டார். இது உண்மையிலேயே நம்ப முடியாதது" என்று அஸ்வின் வியப்புடன் தெரிவித்தார்.
வலைப்பயிற்சியின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை வைபவ் அடித்து நொறுக்கியதைப் பார்த்து, "14 வயது சிறுவனிடம் அடி வாங்குவது எப்படி இருக்கிறது?" என்று ஜோஸ் பட்லர், ஆர்ச்சரிடம் கேட்டதாகவும் அஸ்வின் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
சிறு வயதிலேயே இத்தகைய முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.