சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்து வருகிறார். வெறும் 227 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்த இவரை, வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த அதிரடி முடிவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ள ஒரு கருத்து, தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிசிசிஐ தனது வீரர் தேர்வில் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அஸ்வின் விளாசியுள்ளார். இது குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், "இந்திய அணிக்காக விளையாடுவது என்பது ஒரு வீரரின் வாழ்நாள் பெருமை. அந்த இந்திய அணித் தொப்பியைப் (கேப்) பெறுவதற்கு ஒரு தனி மதிப்பு இருக்க வேண்டும். தற்போது ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலே மிக எளிதாக இந்திய அணித் தொப்பி (சர்வதேச வாய்ப்பு) வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் கலாச்சாரம் மாற வேண்டும். இந்திய அணித் தொப்பியை சும்மா வாரி வழங்காதீர்கள்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

திறமையான இளம் வீரர்களை வளர்த்தெடுக்க அஸ்வின் ஒரு மாற்று யோசனையையும் முன்வைத்துள்ளார். "இளம் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் தேவை என்றால், அவர்களை நேரடியாக இந்திய அணியில் சேர்ப்பதற்குப் பதிலாக 'இந்தியா ஏ' அணிக்காக விளையாட அனுப்பலாம். அந்தச் சுற்றுப்பயணங்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான அனுபவம் கிடைக்கும். அந்தப் போட்டிகளை வேண்டுமானால் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யலாம். மக்கள் அதைப் பார்த்து ரசிப்பார்கள். ஆனால், தேசிய அணியில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்கக் கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக 90-களில் கொடிகட்டிப் பறந்த ஆஸ்திரேலிய அணியை அஸ்வின் சுட்டிக்காட்டினார். "அன்றைய ஆஸ்திரேலிய அணியில் பிராட் ஹாக், மார்ட்டின் லவ் போன்ற தகுதியான வீரர்களுக்குக் கூட இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. மைக்கேல் ஹசி போன்ற ஜாம்பவான்கள் கூட மிகத் தாமதமாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள். அதனால்தான் அந்த அணிக்கு இன்றும் உலக அளவில் தனி மரியாதை உள்ளது. இந்தியாவிலும் திறமையான வீரர்களுக்குப் பஞ்சமில்லை, ஆனால் தேசிய அணித் தொப்பியை வழங்குவதில் பிசிசிஐ கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்" என்று அஸ்வின் கூறி இருக்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷி ஒருவேளை ஜூன் மாதம் இந்திய அணியில் அறிமுகமானால், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அஸ்வினின் இந்த அதிரடி அறிவுரையை பிசிசிஐ ஏற்குமா?
