151 ரன்கள், 9 சிக்ஸர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் முதலிடம் பிடித்து வைபவ் சூர்யவன்ஷி மாஸ் சாதனை
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்தத் தொடரில் 3 போட்டிகளில் ஆடிய அவர் 50.33 என்ற பேட்டிங் சராசரியுடன், 196.10 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 151 ரன்கள் குவித்தார். தான் எதிர்கொண்ட 77 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வைபவ், 2 அரைசதங்களுடன் தொடரின் அதிக ரன் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

அவருக்கு அடுத்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், 3 இன்னிங்ஸ்களில் 48.33 சராசரியுடன் 145 ரன்கள் எடுத்து 2வது இடம் பிடித்தார். அவர் 154.25 ஸ்ட்ரைக் ரேட்டில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார். மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி தரப்பில் ரையான் பர்ல் இடம் பெற்று இருக்கிறார். அவர் 3 போட்டிகளில் 50.00 சராசரியுடன் 100 ரன்கள் குவித்து தனது அணிக்காகத் தனியாளாகப் போராடினார்.
இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 40.00 சராசரியுடன் 80 ரன்கள் குவித்து நான்காவது இடத்தை பிடித்துள்ளார். ஐந்தாவது இடத்தை பிடித்து இருக்கும் திலக் வர்மா தான் ஆடிய 3 போட்டிகளிலுமே ஆட்டமிழக்காமல் 179.06 ஸ்ட்ரைக் ரேட்டில் 77 ரன்கள் குவித்து சிறந்த ஃபினிஷராகச் செயல்பட்டார்.
இங்கிலாந்து டி20 தொடரில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி அதில் மூன்று போட்டிகளில் ஆடி சொற்ப ரன்களே எடுத்தார். தற்போது அந்த பின்னடைவில் இருந்து மீண்டு வந்து ஜிம்பாப்வே தொடரில் அணியிலேயே அதிக ரன் குவித்த வீரராக மாறி இருக்கிறார். மேலும், மூன்றாவது டி20 போட்டியில் 81 ரன்கள் குவித்ததை அடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் அதிக ரன் குவித்ததற்காக தொடர்நாயகன் விருதையும் வென்றார்.


Click it and Unblock the Notifications

