டவ்: 2025 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி அனைவரையும் வியக்க வைத்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய அண்டர் 19 அணியில் இடம்பெற்று இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா அண்டர் 19 அணி, அங்கு நடைபெற்ற யூத் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அண்டர் 19 அணி முதலில் பேட்டிங் செய்து 42.2 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஐசக் முகமது அதிகபட்சமாக 28 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்திருந்தார். ராக்கி பிளின்டாஃப் நிதானமாக ஆடி 90 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்திருந்தார். இவர் இங்கிலாந்து ஜாம்பவானான ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.

இதை அடுத்து, 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா அண்டர் 19 அணி ஆடியது. இந்த அணியின் கேப்டனான சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மத்ரே ஒருபுறம் நிதானமாக ஆட, மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். ஆயுஷ் மத்ரே 30 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி வியக்க வைத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 252.63 என்பதாக இருந்தது. இந்தப் போட்டியில் இரு தரப்பு வீரர்களுமே நிதானமாக ஆடிய நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் அபிக்யான் குன்டு 34 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து கடைசி வரை நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 24 ஓவர்களில் 175 ரன்கள் என்ற இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை அடுத்து வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே அதிரடியாக ஆடினார், மற்ற போட்டிகளில் எப்படி விளையாடுவார் என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் அவரது அதிரடி ஆட்டம் பலரையும் வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
அவர் இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகளிலும் இதே மாதிரி விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருக்கு இணையாக பாராட்டப்பட்டு வரும் ஆயுஷ் மத்ரே கேப்டனாக இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், பேட்ஸ்மேனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரும் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.