Vaibhav Suryavanshi: ஆட்டமிழந்த பிறகு ஒவ்வொரு முறையும் வருந்துவது ஏன்? வைபவ் சூர்யவன்ஷி விளக்கம்
கவுஹாத்தி: ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி அதிரடி காட்டி வருகிறார். கவுஹாத்தியின் பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தி, ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் புவனேஷ்வர் குமாரை சிக்ஸருக்கு பறக்கவிட்டு தனது 50 ரன்களை எட்டினார்.
நடப்பு சீசனில் 2வது முறையாக 15 பந்தில் அரைசதம் அடித்தது மட்டும் அல்லாமல் ஆரஞ்ச் நிற தொப்பியையும் அவர் வென்றுள்ளார். ஆட்ட நாயகன் விருது வென்றது குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி "இன்று இரவு கேக் கொண்டாட்டமா?" என்ற கேள்விக்கு, "இல்லை சார், நாளை அதிகாலை விமானம் உள்ளதால் இன்று சீக்கிரம் தூங்க வேண்டும்" என்றார்.

"பயிற்சியில் என்ன செய்வேனோ, அதையே களத்தில் செய்வேன். புதிதாக எதையும் முயற்சிக்காமல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என் வழக்கம்," எனக் குறிப்பிட்டார்.பும்ரா, ஹேசல்வுட் போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அச்சமில்லாமல் விளையாடியது குறித்து, "யார் பந்துவீசுகிறார்கள் எனத் தெரிந்தாலும், பந்துவீச்சாளரைக் கவனிக்காமல், பந்தின் போக்கிலேயே கவனம் செலுத்தினேன்," என்று விளக்கினார்.
"என் தந்தை, பயிற்சியாளர்கள், ரோஹி சார் எனக்கு பாதுகாவலர்களாக உள்ளனர். 'இந்த பயணம் நீளமானது, இது ஆரம்பம்தான். செயல்முறை மற்றும் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து' என அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துவார்கள்," எனவும் வைபவ் கூறினார். ஆட்டமிழந்த பின் தான் ஏன் வருந்துகிறார் என்பதையும் அவர் விளக்கினார். "நான் களத்தில் நீடித்திருந்தால் 10-20 ரன்கள் அதிகம் எடுக்க முடியும்.
இது இலக்கை துரத்தும்போது இரண்டு ஓவர்கள் முன்பே முடிக்கவோ, அல்லது இலக்கை நிர்ணயிக்கும் போது கூடுதல் ரன்கள் எடுக்கவோ உதவும். தவறான ஷாட் ஆடி வெளியேறுவது அணிக்கு ஒரு பின்னடைவு என்பதால், இன்னும் சற்று நேரம் களத்தில் இருந்திருக்கலாமே என ஏமாற்றம் வரும்," என்று வைபவ் கூறினார்.


Click it and Unblock the Notifications