வைபவ் சூர்யவன்ஷி வயிற்றில் அடித்த பந்து.. கீழே அமர்ந்து துடித்த காட்சி.. 3வது டி20யில் ஆடுவாரா?
நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பந்து பலமாகத் தாக்கியதில் நிலைதடுமாறி மைதானத்திலேயே உட்கார்ந்து வலியில் துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் 3வது டி20 போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வலைப்பயிற்சியின் போது, த்ரோ-டவுன் நிபுணர் ரகு வீசிய அதிவேகப் பந்தை வைபவ் சூர்யவன்ஷி புல் ஷாட் ஆட முயன்றார். அப்போது பந்து எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமாகத் தாக்கியது. பந்து பட்ட வேகத்தில் கடுமையான வலியால் துடித்த வைபவ் சூர்யவன்ஷி, அப்படியே மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்தார். இதனால் அங்கிருந்த பயிற்சியாளர்களும் மருத்துவக் குழுவினரும் பதற்றமடைந்தனர். உடனடியாக ரகு மற்றும் இந்திய மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து அவரை கண்காணித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிறிது நேரம் மைதானத்தை விட்டு வெளியே சென்ற வைபவ் சூர்யவன்ஷிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. உடற்பயிற்சி பயிற்சியாளர் அட்ரியன் லெ ராக்ஸுடன் ஆலோசனை நடத்திய பிறகு, வலியிலிருந்து மீண்ட அவர் மீண்டும் வலைப்பயிற்சிக்குத் திரும்பினார். அவர் பயிற்சியை முழுமையாக முடித்ததால், அவரது காயத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவர் விளையாடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றே தெரிகிறது.
சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஆடும் லெவனில் களமிறங்கி தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார் வைபவ் சூர்யவன்ஷி. அறிமுகப் போட்டியில் அவர் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் பந்துவீச்சில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தனது அதிரடியைக் காட்டினார்.
ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்களை 237.30 ஸ்டிரைக் ரேட்டுடன் குவித்து ஆரஞ்சு தொப்பியுடன் தொடரின் மதிப்புமிக்க வீரர் விருதையும் தட்டிச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் மூன்றாவது டி20 போட்டியில் அரைசதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications
