பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வரும் பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி யூத் ஒருநாள் போட்டியின்போது, 16 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடையோருக்கான யூத் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடர் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஃபார்மில் இருந்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே 38 மற்றும் 70 ரன்கள் குவித்து, இந்திய அண்டர் 19 அணி தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

பிரிஸ்பேனில் உள்ள இயன் ஹீலி ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது போட்டியில், வைபவ் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், இந்த 16 ரன்கள், அவரை இந்தப் புதிய உலக சாதனைக்கு அழைத்துச் சென்றது. இந்தப் போட்டியுடன் சேர்த்து, வைபவ் சூர்யவன்ஷி தனது 11 யூத் ஒருநாள் இன்னிங்ஸ்களில், 50.54 என்ற அசத்தலான சராசரியுடன் 556 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில், 1997-98 காலகட்டத்தில் பாகிஸ்தானின் ஹசன் ராசா மட்டுமே வைபவை விட அதிக ரன்கள் குவித்துள்ளார்.
பாபர் அசாமை முந்தியது மட்டுமல்லாமல், மேலும் பல சாதனைகளையும் வைபவ் தன்வசம் வைத்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள்: இந்தத் தொடரில், யூத் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் (43 சிக்ஸர்கள்) என்ற உன்முக்த் சந்த்தின் நீண்ட கால சாதனையையும் அவர் முறியடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இளம் வயதில் அரைசதம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யூத் ஒருநாள் போட்டிகளில் அரைசதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை, ஹசன் ராசாவை விட ஒரு வயது குறைவாக இருக்கும்போதே படைத்துள்ளார்.
நான்கு அரைசதங்கள்: தனது 14 வயது மற்றும் 181 நாட்களில், யூத் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நான்கு அரைசதங்களை அடித்த இளம் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, 16 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய யூத் ஒருநாள் போட்டிகளில், சர்ஃபராஸ் கான் (308 ரன்கள்) அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தார். வைபவின் இந்தத் தொடர்ச்சியான சாதனைகள், விரைவில் அவர் இந்திய அணியில் இணைவார் என்பதை கூறுவதாக அமைந்துள்ளது.