லண்டன்: இந்திய கிரிக்கெட் இளம் வீரராக வைபவ் சூர்யவன்ஷி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் அவர் அண்டர் 19 அணியில் இடம் பெற்று விளையாடினார். அங்கு அவரை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக இரண்டு இளம் ரசிகைகள் சுமார் ஆறு மணி நேரம் காரில் பயணம் செய்து வந்து அவரை நேரில் பார்த்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்திய அண்டர் 19 அணி மற்றும் இங்கிலாந்து அண்டர் 19 அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட இளைஞர் ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 4 போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு அதிரடி சதத்தை விளாசி இருந்தார். அவர் இந்த ஐந்து போட்டிகளில் 355 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 174.02 என்பதாக இருந்தது, பேட்டிங் சராசரி 71 என்பதாக இருந்தது. 30 ஃபோர் மற்றும் 29 சிக்ஸர்களை விளாசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஐந்தாவது போட்டியில் அவர் ஆடி முடித்தவுடன் அவரைப் பார்ப்பதற்கு இரண்டு இளம் ரசிகைகள் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியை அணிந்து நேரில் வந்தனர். அவர்களுடன் அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் வோர்செஸ்டர் என்ற பகுதியில் இருந்து ஆறு மணி நேரம் பயணம் செய்து வைபவ் சூர்யவன்ஷியைப் பார்ப்பதற்கு வந்திருக்கின்றனர் என்ற தகவல் சொல்லப்பட்டது.
இந்த புகைப்படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, அவர்களைச் சிறந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான சூர்யவன்ஷி, 14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதில் ஐபிஎல்-லின் அதிவேக சதத்தை அடித்து பிரம்மாண்ட சாதனை படைத்திருந்தார்.
தற்போது இந்திய அண்டர் 19 அணியில் 14 வயதிலேயே இடம் பிடித்து அசுரத்தனமான ஆட்டத்தை ஆடி இருக்கிறார். 15 ஆண்டு ஆன பிறகு இந்திய அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டியில் ஆட முடியும் என்பதால், அவர் தற்போது அதற்கான முயற்சியில் இருக்கிறார். அவர் இதேபோல் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும், சர்வதேச அண்டர் 19 போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.