பாட்னா: 2025 ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஈர்த்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பீகார் மாநில கிரிக்கெட்டில் லஞ்சம் மற்றும் அரசியல் காரணமாக பல வீரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியானதுண்டு. மேலும், அந்த அணி ரஞ்சி டிராபி உள்ளிட்ட முக்கிய தொடர்களில் மோசமாக செயல்பட்டு வருவதற்கு அதுவும் ஒரு காரணம் எனப் பலரும் இதற்கு முன் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணியில் இடம் பெற்று ஆடிவரும் நிலையில், அவரைத் தேர்வு செய்வதற்கு பீகார் கிரிக்கெட் அமைப்பு ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை என சூர்யவம்சியின் தந்தை கூறியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து பயிற்சி பெற்று வந்த அவர், 13 வயதிலேயே பீகார் மாநில சீனியர் அணியில் இடம்பிடித்துவிட்டார்.

இந்த நிலையில், அது குறித்துப் பேசிய வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை சஞ்சீவ் சூர்யவம்சி, "பீகார் மாநில கிரிக்கெட்டில் லஞ்ச விவகாரங்கள் எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை. ஒரு ரூபாய் கூட யாரும் கேட்கவில்லை. வைபவ் சூர்யவன்ஷி அண்டர் 16, அண்டர் 19 மற்றும் ரஞ்சி டிராபியிலும் விளையாடினார். ஆனால் ஒரு ரூபாய் கூட யாரும் கேட்கவில்லை. அவர் நன்றாக விளையாடினார்; அதனால் வாய்ப்பு பெற்றார்" என்று கூறியிருக்கிறார்.
ஆனால், இதற்கு முன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிஷன், முகேஷ் குமார் ஆகியோர் அங்கு நிலவி வந்த அரசியல் மற்றும் ஊழல் காரணமாக அங்கிருந்து விலகி வேறு மாநிலங்களுக்காக கிரிக்கெட் விளையாடினர். அதன் மூலமாகத்தான் அவர்கள் இந்திய அணியிலும் இடம்பிடித்தனர். இந்த நிலையில் தான் வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை இவ்வாறு கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் 15 வயதை அடைந்த பின்னரே சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.