பாட்னா: தனது மகன் வைபவ் சூர்யவன்ஷி 14 வயதில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்ததை பற்றி அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்திருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதான வைபவ், 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இதுவரை மூன்று போட்டிகளில் துவக்க வீரராக இறங்கிய அவர், தனது மூன்றாவது போட்டியில் சதம் அடித்திருக்கிறார். அதிலும் 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார். இதை அடுத்து வைபவ் சூர்யவன்ஷியின் சொந்த ஊரான பீகாரில் உள்ள சமஸ்திபூர் கொண்டாட்டத்தில் இருக்கிறது.

அங்கு அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தனது மகனின் ஆட்டம் குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோவை பீகார் கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. தனது மகனின் ஆட்டம் குறித்து பேசிய சஞ்சீவ் சூர்யவன்ஷி, "'வைபவ் எங்கள் கிராமத்தையும், பீகாரையும், ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தி இருக்கிறான். இதை விட எங்களுக்கு வேறு மகிழ்ச்சியே இல்லை. நாங்கள் இதை கொண்டாடி வருகிறோம்."
"நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் கடந்த மூன்று நான்கு மாதமாக வைபவுக்காக நிறைய வேலைகளை செய்திருக்கிறார்கள். அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மற்ற உதவி பயிற்சியாளர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் வைபவின் ஆட்டம் முன்னேற காரணமாக இருக்கின்றனர்."
"வைபவ் தனது ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு மிகவும் கடுமையாக முயற்சி செய்தான். அதன் விளைவாகவே இந்த சதம் கிடைத்து இருக்கிறது. பீகார் கிரிக்கெட்டின் தலைவர் ராகேஷ் திவாரிக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் இவனுக்கு இத்தனை இளம் வயதிலேயே பீகார் மாநில மூத்த வீரர்களுக்கான அணியில் இடம் அளித்திருக்கிறார்." என்றார்.
இந்த பேட்டியின் போது சஞ்சீவ் சூர்யவன்ஷி மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். இதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி தனது பெற்றோர் குறித்தும், அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்தும் பேசி இருக்கிறார். "நான் இப்போது இங்கு இருக்கும் இடத்திற்கு எனது பெற்றோர்தான் முக்கிய காரணம். எனது தந்தை வேலையை விட்டுவிட்டு என்னை பார்த்துக் கொள்கிறார். எனது மூத்த சகோதரர் வேலைக்கு செல்கிறார். எங்கள் வீடு கடினமான சூழ்நிலையில்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் எனது அப்பா எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்." என்று கூறியிருந்தார்.