அரைசதம் அடித்தும் ஆட்டநாயகன் விருது இல்லை.. 14 வயது வைபவ் சூர்யவன்சி ஏமாற்றம்.. என்ன நடந்தது?
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்த நிலையில், இந்த இரண்டு அணிகளும் 62-வது லீக் போட்டியில் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இதுவே கடைசி லீக் போட்டியாகவும் இருந்தது. எனவே, இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தோனி மற்றும் சிவம் துபே அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை.

மேலும், கடைசி நேரத்தில் பந்துவீசிய ஆகாஷ் மத்வால் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ரன்களை மிகவும் குறைவாக விட்டுக்கொடுத்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. அந்த அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். வைபவ் சூர்யவன்சி 33 பந்துகளில் அதிரடியாக 57 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
துருவ் ஜூரெல் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 17.1 ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் வீழ்த்துவதற்கு வைபவ் சூர்யவன்சி முக்கிய காரணமாக இருந்தார்.
வைபவ் சூர்யவன்சி அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து இருந்த நிலையில், அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பந்துவீச்சில் ரன்களை மிகவும் குறைவாக விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் மத்வால்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications